இஸ்லாத்தில் நோன்பு கடமையாக்கப்பட்டிருக்கிறது! இப்தார் நிகழ்வில் பணிப்பாளர் உமர் மௌலானா.

( வி.ரி.சகாதேவராஜா) இஸ்லாத்தில் நோன்பு கட்டாய கடமையாக்கப்பட்டு இருக்கின்றது. இவ்வாறு சம்மாந்துறை வலயக்கல்விப் பணிமனையின் வருடாந்த இப்தார் நோன்பு திறக்கும் வைபவத்தில் தலைமை உரையாற்றிய வலயக்கல்விப் பணிப்பாளர் டாக்டர் உமர் மௌலானா தெரிவித்தார்.
சம்மாந்துறை வலயக்கல்விப் பணிமனையின் வருடாந்த இப்தார் நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்வு நேற்று முன்தினம் மாலை பணிமனை வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் ஏ.நசீர், கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் ( நிதி)  ஏ.எம்.றபீக்,  சம்மாந்துறை பிரதேச செயலாளர் எம் எச் எம். ஹனிபா  உள்ளிட்ட பல்வேறு முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்.. மூவின சகோதர சகோதரிகளும் இணைந்திருக்கின்ற சம்மாந்துறை வலயத்தில் இது ஓர் இன ஐக்கிய சமாதான இப்தார் நிகழ்வாகும். சகல மதங்களிலும் நோன்பு நோற்கும் நடைமுறை வழக்கத்தில் இருக்கிறது.
இஸ்லாத்தில் புனித ரமழான் மாதத்தில்  நோன்பிருந்து அல்லாஹ்வை அருள் பெற கடமையாக்கப்பட்டுள்ளது. இங்கே ஏனைய சகோதரர்களும்  நோன்பின் மகத்துவத்தை பரிமாறிக் கொள்வதில் அன்பு விளைகிறது. நல்லிணக்கம் புரிந்துணர்வு மேலும் வலுப்பெறுகிறது. அனைத்து சமயங்களும் நோன்பை நோற்கின்றனர் .அது உடலுக்கு மாத்திரம் அல்ல உளத்துக்கும் உற்சாகமூட்டக்கூடியது. இறை சிந்தனை ஏற்படுத்தக்கூடியது. புனித அல்குர்ஆன் அருளப்பட்ட புனித ரமழான் மாதத்திலே நோன்பு நோற்கின்ற அனைவரும் பாக்கியசாலிகள். இதற்காக ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றிகள்.
நிகழ்வில் முக்கிய பிரமுகர்கள் பணிமனையின் கல்வி சார் அதிகாரிகள் கல்விசாரா உத்தியோகத்தர்கள் அதிபர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.