( வி.ரி. சகாதேவராஜா) திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் உள்ள அனைத்து வைத்திய அதிகாரிகளையும் அவர்கள் பாதுகாப்பு கருதி வேறிடத்துக்கு தற்காலிகமாக இடமாற்றுமாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் சுகாதார அமைச்சின் செயலாளரை கேட்டுக் கொண்டிருக்கின்றது.
சுகாதார அமைச்சரின் செயலாளர் டாக்டர்
அசேல குணவர்தனவுக்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஹரித அலுத்கே கடிதத்தை அனுப்பி வைத்திருக்கிறார்.
அங்குள்ள எட்டு மருத்துவ அதிகாரிகளையும் அக்கரைப்பற்று பொத்துவில் கல்முனை மற்றும் அம்பாந்தோட்டை பிலியந்தல பியகம ஆகிய இடங்களுக்கு தற்காலிகமாக இடமாற்றுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அண்மையில் அங்கு ஏற்பட்ட அசாதாரண சம்பவம் காரணமாக வைத்திய அதிகாரிகள் கடந்த 12 நாட்களாக பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதனால் வைத்திய சாலை நடவடிக்கைகள் முற்றாக செயலிழந்துள்ளது.
அதன் காரணமாக பொதுமக்கள் பெரும் அசௌகரியத்துக்குள்ளாகியுள்ளனர்.
கடந்த இரு நாட்களாக பல தரப்பட்ட பேச்சு வார்த்தைகள் கூட்டங்கள் இடம் பெற்ற போதிலும் வைத்திய சாலை இன்னும் திறக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.