” மரகதம்” வரலாற்று நூல் வெளியீட்டு விழா.

(வி.ரி.சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற நிந்தவூர்  மடத்தடி மீனாட்சி அம்மன் ஆலயத்தின்  “மரகதம்” வரலாற்று நூல் வெளியீட்டு விழா நேற்று முன்தினம் (16)சனிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.
ஆலய பரிபாலன சபையின் ஆலோசகரும் உதவிக் கல்விப் பணிப்பாளருமான விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா தொகுத்து எழுதிய இந் நூல் வெளியீட்டு விழா
ஆலய சந்நிதானத்தில் ஆலய தலைவர் கலாநிதி கி. ஜெயசிறில் தலைமையில் நடைபெற்றது.
ஆன்மீக அதிதியாக இராமகிருஷ்ண மிஷன் மட்டக்களப்பு ஆச்சிரம பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மகராஜ் கலந்து சிறப்பித்தார்.
பிரதம அதிதியாக கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி மூ. கோபாலரெத்தினம்  கலந்து சிறப்பித்தார்.
ஆசியுரையை  ஆலய பிரதம குரு ஸ்ரீ சண்முகமகேஸ்வரக் குருக்கள் வழங்கினார்.  வெளியிட்டுரையை நூலாசிரியர் வி.ரி.சகாதேவராஜா நிகழ்த்தினார்.
 முதல் பிரதியை ஆலய தலைவர் கி.ஜெயசிறில் சுவாமி நீலமாதவானந்தா ஜீக்கு  வழங்கி வைத்தார். ஏனைய பிரதிகள் அனைவருக்கும் வழங்கப்பட்டன  .
நூலுக்கு அனுசரணை வழங்கிய லண்டனில் வாழும் காரைதீவைச் சேர்ந்த ரி.விஜயலதா ரி.விஜயகரன் சார்பில் அவரது சகோதரர்  சி.பிரேமச்சந்திரன் சிறப்பு பிரதியை பெற்றுக் கொண்டார்.
நிகழ்வின் சிறப்பம்சமாக வெளியீடு விழா அடையாளமாக மீனாட்சி அம்மனின் அழகான பெறுமதியான  திருவுருவப்படங்கள் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மகராஜ், கலாநிதி மூ.கோபாலரெத்தினம் மட்டக்களப்பு ஆசிரிய தம்பதியினர் சுகுணமதிஅருள்ராஜா, முதலைக்குடா ஆசிரியை திருமதி நளினி அகிலேஸ்வரன், அதிபர்களான பி.தயாநிதி,( வீரமுனை) செ.சிவயோகராஜா( காரைதீவு) ஆகியோருக்கு வழங்கி வைக்கப்பட்டன.
அதேவேளை, 550 வருடகால வரலாற்று பாரம்பரியத்துடன் கூடிய மடத்தடி  மீனாட்சி அம்மன் ஆலயத்திற்கான முதல் வரலாற்று நூலான “மரகதம்” நூல் வெளியீட்டு விழாவிற்கு
முன்னதாக அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன், ஜனாதிபதி செயலணியின் கிழக்கு மாகாண இணைப்பாளர் கணபதிப்பிள்ளை மோகன் கலந்து சிறப்பித்தனர்.
அவ்வமயம்   சகல  அடியார்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
 ஆலய செயலாளர் த.சண்முகநாதன் நன்றிகள் தெரிவித்தார்.