சிறுவர்களுக்கான சார்க் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளும் இலங்கைச் சிறார்கள் குழுவில் மட்டக்களப்பைச் சேர்ந்த மாணவி

எஸ்.எஸ்.அமிர்தகழியான்

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் ஓட்டமாவடி பாத்திமா பாலிகா  மகா வித்தியாலயத்தில் பாடசாலைக்  கல்வியைத் தொடரும்  முஹம்மது இஸ்மாயில் ரணா சுக்ரா எனும் மாணவி தெற்காசிய நாடுகளுக்கிடையிலான (சார்க்) உச்சி மாநாட்டின், சிறுவர்களுக்கான மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளார்.

தெற்காசிய சிறார்கள் எதிர் நோக்கும் சமகால சவால்கள் தொடர்பாக  பெப்ரவரி மாதம் 27, 28  ஆம் திகதிகளில் இம்மாநாடு பூட்டான் நாட்டின் தலைநகரில்  இடம்பெறவுள்ளது.

இக் கூட்டத் தொடரில் பங்குபற்றுவதற்காக இலங்கையின் பிரதிநிதியாக   சிறார்கள் இருவர் செல்லவுள்ளனர்.  இவர்களில் மட்டக்களப்பைச் சேர்ந்த மாணவி ரணா சுக்ராவும்   பதுளை மாவட்ட மாணவரொருவரும் பூட்டான் நாட்டிற்கு  செல்ல விருக்கின்றார்கள்.

தேசிய சிறுவர் சபை இணைச் செயலாளரும், மட்டக்களப்பு மாவட்ட  சிறுவர் சபையின் செயலாளராகவும் மாணவி சுக்ரா  செயற்படுகிறார்.

அத்துடன்  கோறளைப்பற்று மேற்கு  ஓட்டமாவடி பிரதேச செயலகத்தின் சிறுவர் சபையின் செயலாளருமாகவும், 208B/2 கிராம உத்தியோகத்தர் பிரிவில் இயங்கி வரும்  நியுடலண்ட் சிறுவர் கழகத்தின் தலைவியாகவும் ரணா சுக்ரா   ஒரு  மாணவியாக இருந்தும்  தனது தலைமைத்துவ ஆற்றல்களை வெளிப்படுத்தி வருகின்றார்.

அத்துடன்  இவர் செயற்கை நுண்ணறிவுத்  தொழில்நுட்பத்தை பயன்படுத்தி டிஜிடல் கதைசொல்லுதல்  போட்டியில் தேசிய விருது பெற்றமை குறிப்பிடத்தக்கது