சுவிஸ் அரசியல் பிரமுகர் கலாநிதி சிறி இராசமாணிக்கம் கருத்து
எமது இனத்தின் வலிகளை சுமந்து வந்திருக்கும் கிழக்கில் சிவந்த சுவடுகள் என்ற இந்நூல் ஆங்கிலம் ஜேர்மன் ஆகிய பிறமொழிகளிலும் மொழிபெயர்ப்பு செய்ய வேண்டும் என கிழக்கில் சிவந்த சுவடுகள் என்ற நூல் அறிமுக விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட சுவிட்சர்லாந்து சோசலிச ஜனநாயக கட்சி உறுப்பினரும் தேர்தல் ஆணைக்குழு உறுப்பினரும் தொழிலதிபருமான கலாநிதி சிறி இராசமாணிக்கம் தெரிவித்தார்.
ஊடகவியலாளர் இரா.துரைரத்தினம் எழுதிய கிழக்கில் சிவந்த சுவடுகள் நூல் அறிமுக விழா சுவிஸ் சூரிச் நகரில் ஊடகவியலாளர் தா.வேதநாயகம் தலைமையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சர்வதேசத்தின் முன் நாம் நீதி கோர வேண்டுமாக இருந்தால் இத்தகைய ஆவண நூல்கள் பிறமொழிகளிலும் மொழிபெயர்ப்பு செய்யப்பட வேண்டும் என கலாநிதி சிறி இராசமாணிக்கம் தெரிவித்தார்.
ஊடகவியலாளர் இரா.துரைரத்தினம் அவர்களை எனக்கு நீண்டகாலமாக தெரியும். சுவிட்சர்லாந்தில் சர்வசன வாக்கெடுப்பு ஒன்று நடத்தப்பட்ட போது இங்கு வாழும் தமிழ் மக்களுக்கு அதனை தெளிவூட்டும் வகையில் தான் பணியாற்றிய தொலைக்காட்சியில் என்னிடம் செவ்வி ஒன்றை எடுத்து ஒளிப்பரப்பினார். ஆந்த பிரசாரம் எமக்கு பெரும் வெற்றியை தந்தது. சமூக பொறுப்போடு நீண்டகாலமாக ஊடகத்துறையில் பணியாற்றும் அவர் கடந்த காலங்களில் மக்களுக்கு ஏற்பட்ட அழிவுகளை அவலங்களை போர்க்குற்றங்களை ஆதாரங்களுடன் கிழக்கில் சிவந்த சுவடுகள் என்ற நூலை வெளியிட்டிருக்கிறார்.
காலத்தின் தேவைக்காக அவர் இதனை மிகுந்த பொறுப்புணர்வுடன் எமக்கு தந்திருக்கிறார். அவரின் இந்த பணிகளுக்கு என்றும் எனது ஆதரவு இருக்கும் என கலாநிதி சிறி இராசமாணிக்கம் தெரிவித்தார்.
சிறப்பு அதிதியாக கலந்து கொண்ட தொழிலதிபரும் எழுத்தாளருமான கலாநிதி நாகேஸ்வரன் அருள்ராசா உரையாற்றுகையில் சூரியனால் மட்டும் கிழக்கு சிவக்கவில்லை, இனமோதல்களால் மதமோதல்களால் இயக்க மோதல்களால் பிரதேச மோதல்களாலும் கிழக்கு சிவந்திருக்கிறது.
போரின் வலிகளை மக்களுக்கு ஏற்பட்ட இழப்புக்கள் வலிகளை ஆதாரபூர்வமாக இந்நூல் பேசுகிறது. இது ஒரு ஆவணம். இந்நூல் அடுத்த சந்ததிக்கும் சென்றடைய வேண்டும் என அவர் தெரிவித்தார்.
நூல் அறிமுக உரையை எஸ்.ஜெயமோகன் அவர்களும் நூல் விமர்சன உரையை ஊடகவியலாளர் புஸ்பராசா அசோக் லூயிஸ் நிகழ்த்தினார்.
ஏற்புரையையும் நன்றியுரையையும் நூலாசிரியர் இரா.துரைரத்தினம் நிகழ்த்தினார்.
நூலாசிரியர் இரா,துரைரத்தினம் அவர்களுக்கு ரி.ஆர்.ரி தமிழ் ஒலி வானொலி சார்பில் மூத்த பத்திரிகையாளர் ஞா.குகநாதன் அவர்களும் உலக இந்து ஆத்மீக அறக்கட்டளையின் தலைவர் வேலுப்பிள்ளை கணேசகுமார் அவர்களும் பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.