(வாஸ் கூஞ்ஞ)
மன்னார் பொலிஸ் பிரிவில் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டு இரண்டு குற்றங்களுக்கு உள்ளாகிய ஒரு குடும்பஸ்தருக்கு மன்னார் மேல் நீதிமன்றம் ஒவ்வொரு குற்றத்துக்கும் தலா ஏழு வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதுடன் தலா ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதித்துள்ளது.
மன்னார் பொலிஸ் பிரிவுற்கு உட்பட்ட கரிசல் பகுதியில் ஒரு குடும்பஸ்தர் 2021 ஆம் ஆண்டு ஒரு கிராம் 288 மில்லி கிராம் தூய்மையான கரோயின் என்ற போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டிருந்தார்.
இந் நபருக்கான வழக்கு மன்னார் மேல் நீதிமன்றில் இடம்பெற்ற நிலையில் இவ் வழக்கு செவ்வாய் கிழமை (13) மன்னார் மேல் நீதிமன்றில் தீர்ப்புக்காக மேல் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.மிஹால் முன்னிலையில் அழைக்கப்பட்டது.
பொலிசார் இந் நபருக்கு எதிராக இரண்டு குற்றச்சாட்டுக்களை நீதிமன்றில் தாக்கல் செய்திருந்தனர்.
ஓன்று மேற்குறிப்பிடப்பட்டுள்ள அளவு கொண்ட கரோயின் போதைப் பொருளை தன் வசம் தை;திருந்தமை
அடுத்து இப் போதைப் பொருளை விற்பனைக்காக உட்படுத்திருந்தமை என்ற குற்றச்சாட்டுக்களே தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இக்குற்றச்சாட்டுகள் தொடர்பாக செவ்வாய் கிழமை (13) வழங்கப்பட்ட தீர்ப்பில் இந்நபர் குற்றவாளியாக காணப்பட்டதைத் தொடர்ந்து மன்னார் மேல் நீதிமன்னறம் இவருக்கு ஒவn;வாரு குற்றச்சாட்டுக்கும் தலா ஏழு வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதுடன் ஒவ்வொரு குற்றத்துக்கும் தலா ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டது.
இந்த அபராதத்தை செலுத்த தவறின் ஒவ்வொரு குற்றத்துக்கும் தலா ஆறு மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் கட்டளை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்த குற்றங்களுக்கான தண்டனைகளை சம காலத்தில் அனுபவிக்க முடியும் எனவும் கட்டளை பிறப்பிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.