மன்னார் தீவில் இரண்டாம் கட்ட காற்றலை அமைப்பதை எதிர்ப்பு.

( வாஸ் கூஞ்ஞ)   மன்னார் தீவில் தற்பொழுது பிரச்சனைகளுக்கு உள்ளாகியுள்ள சுற்றாலை தொடர்பாக மக்களுக்கு தெளிவுப்படுத்தி அதற்கான தாக்கல் அறிக்கை சமர்பிக்கும் நோக்குடன் மன்னார் முக்கிய பிரதிநிகளுக்கு வழிகாட்டல் அமர்வு மன்னாரில் இடம்பெற்றது.ஞாயிற்றுக் கிழமை (11) காலை மன்னார் வாழ்வோதய கேட்போர் கூடத்தில் மன்னார் பிரஜைகள் குழுத் தலைவர் அருட்பணி எஸ்.மாக்கஸ் அடிகளார் தலைமையில் இவ் அமர்வு இடம்பெற்றது.

இதன் வளவாளராக சுற்றாடல் நீதித்துறை மையத்தின் பணிப்பாளர் திரு.ஹேமாந்த விதானகே கலந்து கொண்டதுடன் மன்னார் பிரஜைகள் குழு ஆளுநர் சபை உறுப்பினர்கள் , மீனவ சங்கத்தின் பிரதிநிதிகள் மற்றும் அரச சார்பற்ற முக்கியஸ்தர்கள் மதத் தலைவர்கள் இதில் கலந்து கொண்டனர்.

மன்னாரில் மக்களின் சம்மதங்களை பெறாது போலி வாக்குறுதிகளை தெரிவித்து மன்னார் தீவில் முதற் காற்றாலை திட்டத்தை மேற்கொண்டிருந்ததாகவும்

இதனால் சுற்றாடலுக்கான பாதிப்புகளும் மன்னார் தீவின் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் இருக்கைகளும் பெரும் சவாலுக்கு உள்ளாகி வருவதாக பலதரப்பட்ட முறைப்பாடுகளும் கண்டனப் பேரணிகள் காலத்துக்காலம் இடம்பெற்று வருகின்றன என தெரிவிக்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் காற்றாலை சம்பந்தமாக ஜனாதிபதியின் நிலையான ஆற்றல் தொடர்பாக கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதியின் மேலதிக  செயலாளர் இளங்கோ அவர்களின் தலைமையில் பல திணைக்களங்களின் தலைவர்கள் கொண்ட சுமார் இருபது பேர் கொண்ட ஒரு குழுவினர் வெள்ளிக் கிழமை (09) மன்னாருக்கு விஜயத்தை மேற்கொண்டு மன்னார் தீவில் மேலும் காற்றாலை அமைக்கும் தொடர்பாக மன்னார் மாவட்ட செயலகத்தில் பொது அமைப்பு பிரதிநிதிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தனர்.

இங்கும் மன்னார் தீவில் காற்றாலை அமைப்பதற்கான எதிர்ப்புக்கள் பலமாக காணப்பட்டன.

அத்துடன் மன்னார் நகர் பிரதேச செயலகப் பிரிவில் இரண்டாம் கட்டமாக 52 காற்றாலை அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள 250 மெகாவற் காற்றாலை சக்தி திட்டத்தின் சுற்றாடல் தாக்க மதிப்பிட்டறிக்கையை முப்பது நாட்களுக்குள் எழுத்து மூலம் தெரிவிக்கும்படி மன்னார் மக்களுக்கு தற்பொழுது வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ள நிலையில் இன்னும் இரண்டு வாரங்களே காணப்படுவதால் இதற்கான தாக்க அறிக்கை அனுப்புவதற்கான ஆலோசனைக் கூட்டமாக இது அமைந்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

(வாஸ் கூஞ்ஞ)