நிர்மானப் பணிகளை நிறுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு

மூதூர் இந்து இளைஞர் மன்றத்தின் காணியினுள் முகம்மது ஹனிபா சறூக் (ஆமி சறூக்) என்பவராலும் அவரது சகபாடிகளாலூம் மேற்கொள்ளப்பட்டுவந்த கட்டுமானத்திற்கு தடைவிதித்து  (12) முதூர் மாவட்ட நீதிமன்றினால் கட்டாணை கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மூதூர் இந்து இளைஞர் மன்றத்தின் காணியினுள் அத்துமீறி சட்டத்திற்கு முரணான வகையில் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் இது யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் குழப்பத்தையும் அமைதியின்மையையும் ஏற்படுத்தலாம் எனவே அதனை தடுக்கக்கோரியும் குறித்த நபருக்கு எதிராக கட்டாணை கட்டளையொன்றினை பிறப்பிக்குமாறும் மூதூர் இந்து இளைஞர் மன்றத்தினால் மூதூர் மாவட்ட நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

மேற்படி வழக்கானது  (12) எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது வழக்காளியினால், 08.02.2024 ஆம் திகதியன்று இம்மண்ணிலே தன்னுடைய பிராது, சத்தியக்கடதாசி மற்றும் அடையாளமிடப்பட்டு அணைக்கப்பட்ட 18 இற்கும் மேற்பட்ட ஆவணங்கள் என்பவற்றினை அணைத்து பிராதில் கோரியவாறு தன் சார்பாக கட்டாணை கட்டளையொன்றினை வழங்குமாறு வழக்காளியின் சார்பில் ஆஜரான சட்டத்தரணியான இல்யாஸ் முபாரிஸ் திறந்த மன்றில் சமர்ப்பணம் செய்தார்.

இதனை ஆராய்ந்த நீதிமன்றம், முன்னர் தீர்ப்பு வழங்கப்பட்ட ஐந்துக்கும் மேற்பட்ட வழக்குகளையும் அவற்றின் தீர்ப்புகளையும் கோடுடிட்டுக்காட்டி
இக்கட்டானையைப்பிறப்பித்தது. இதன்போது இவ்வழக்கின் எதிராளியோ, அவரைச் சார்ந்தவர்களோ, அவரின் வேலையாட்களோ, பிராதின் ஆதன அட்டவணையில் விபரிக்கப்பட்டுள்ள ஆதனத்திற்குள் அத்துமீறி நுழையக்கூடாதென்றும், அவர்களால் குறித்த ஆதனத்தினுள் கட்டப்பட்டுக் கொண்டிருக்கின்ற கட்டட நிர்மாணப் பணிகளை உடன் நிறுத்துமாறும் தடை செய்கின்ற கட்டாணை ஒன்றினை பிறப்பித்தது.

குறித்த காணி அபகரிப்பு தொடர்பாக திருகோணமலை பிரதிப் பொலிஸ்மா அதிபரிடம் முறையிட்டதைத் தொடர்ந்து கடந்த மாதம் 10 ஆம் திகதி குறித்த தரப்பினர் உட்பட, முறைப்பாட்டாளர்களையும் மூதூர் பொலிஸ் உத்தியோகத்தர்களையும் அழைத்து விசாரணை இடம்பெற்றது. இதன்போது ஆவணங்களை பார்வையிட்ட பொலிஸ்மா அதிபர் சம்பந்தப்பட்ட நபர்களை காணிக்குள் நுழையக்கூடாது என எச்சரித்ததோடு விசேட குற்றப்புலனாய்வுப் பிரிவிலும் முறைப்பாடு ஒன்றை மேற்கொண்டுமாறும் மன்றத்தினரை பணித்திருந்திருந்தார். அதற்கமைய கடந்த மாதம் 26 ஆம் திகதி விசேட குற்றப்புலனாய்வுப் பிரிவிலும் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த காணியினுள் பொலிசாரின் உத்தரவையும்மீறி சட்டத்திற்கு முரணான வகையில் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் இக்கட்டாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.