அம்பாறை மாவட்டத்தில் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தை மீறிய 40 வர்த்தகர்களுக்கு அபராதம்

அஸ்ஹர் இப்றாஹிம்)
அம்பாறை மாவட்டத்தில் கடந்த டிசம்பர் மாதம் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தை மீறி வியாபார நடவடிக்கையில் ஈடுபட்ட 40 வர்த்தகர்களுக்கெதிராக நீதீமன்றங்களில் 1 இலட்சத்து 16 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் அம்பறை மாவட்ட பொறுப்பதிகாரி எஸ்.என்.எம்.சாலிய பண்டார தெரிவித்துள்ளார்.

அக்கரைப்பற்று, கல்முனை, சம்மாந்துறை, பொத்துவில், அம்பாறை மற்றும் தெஹியத்தக்கண்டிய ஆகிய பகுதிகளில் பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகார சபையின் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போது நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தை மீறி வியாபார நடவடிக்கையில் ஈடுபட்ட 115 வியாபாரிகள் கைது செய்யப்பட்டு  நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்டு 40 வியாபாரிகளுக்கு தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளதுடன், ஏனையோருக்கு வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
கட்டுப்பாட்டு விலையை விட கூடுதலான விலைக்கு பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் செய்த முறைப்பாட்டையடுத்தே இச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.
அத்தியாவசிய பொருட்களை அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலான விலைக்கு விற்றமை,  விலைப்பட்டியலை காட்சிப்படுத்தாமை, நுகர்விற்கு பொருத்தமில்லாத பொருட்களை காட்சிப்படுத்தியமை, காலவதியான மற்றும் தரமற்ற பொருட்களை விற்பனை செய்தமை,  மின் உபகரணங்களின் கட்டுறுதிக் காலத்தை வழங்காமை போன்ற  நடவடிக்கைகளில் ஈடுபட்ட வியாபாரிகளே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார்கள்.