(அபு அலா ) கல்முனை கல்வி வலயம் ஆரம்பிக்கப்பட்டு முப்பது ஆண்டுகளின் பின்னர் வலயத்திற்கான கீதத்தை நேற்றைய தினம் (01) அறிமுகம் செய்து புதிய ஆண்டினை ஆரம்பித்து வைத்ததுள்ளது.
புதிய கல்வியாண்டிற்கான சத்தியப்பிரமாணமும் நாட்டிற்காக உயிர்நீத்த படைவீரர்களுக்கான மௌனப் பிரார்த்தனையும் வலயக் கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.சஹ்துல் நஜீம் தலைமையில் இடம்பெற்ற போதே மேற்படி வலயக் கீதம் இசைக்கப்பட்டு வெளியீடு செய்து வைக்கப்பட்டது
நிகழ்வில் கணக்காளர் வை.ஹபீபுல்லா, பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான எம்.எச்.எம்.ஜாபிர், எம்எச்.றியாஸா, ஜிஹானா ஆலிப், திருமதி வருண்யா அடங்கலாக வலயக்கல்விப் பணிமனை அதிகாரிகள் பலரும் பங்கேற்றனர்
வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹ்துல் நஜீம் தேசியக் கொடியினையும் கணக்காளர் வை. ஹபீபுல்லா மாகாணக் கொடியினையும் பிரதிக் கல்விப்பணிப்பாளர் எம்.எச்.எம்.ஜாபிர் வலயக் கொடியினையும் ஏற்றி வைத்தார்.
நிந்தவூர் கோட்டக் கல்விப் பணிப்பாளர் முகம்மட் சாஜித் புதிய ஆண்டுக்கான சத்தியப் பிரமாணத்தை ஒப்புவித்தார்
1994 ஆம் ஆண்டு கல்முனை கல்வி வலயம் ஆரம்பிக்கப்பட்டது முதல் 12 வலயக் கல்விப் பணிப்பாளர்கள் பதவி வகித்துள்ளனர். முப்பது ஆண்டுகளின் பின்னர் முதன் முறையாக வலயக் கீதம் இயற்றி இசைக்கின்ற செயற்பாடு கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹ்துல் நஜீமின் முயற்சியின் பிரதியீடாக நிறைவேற்றப்பட்டுள்ளமை வரலாற்றுத் தடயமகும்.
கல்முனை வலய தமிழ் மொழிப் பிரிவின் ஒருங்கிணைப்பில் வளவாளராக இருந்து ஓய்வு பெற்ற க.குணசேகரம் கீதத்தை இயற்றியதுடன் காரைதீவைச் சேர்ந்த ஊடகவியலாளர் இ.கோபாலசிங்கத்தின் இசையில் வலயக் கல்வி அலுவலக இசைத்துறைக்கான வளவாளர் திருமதி எஸ்.கமலநாதன் பாடலைப் பாடியுள்ளார்.
கல்முனை வலயக் கல்வி அலுவலக பிரதிக் கல்விப்பணிப்பாளர் எம்.எச்.றியாஸா, தமிழ் மொழிக்கான உதவிக் கல்விப் பணிப்பாளர் யூ.எல்.றியால், வளவாளர் ஜெஸ்மி எம்.மூஸா ஆகியேரின் ஒருங்கிணைப்பில் வலயத்திற்கான கீதம் வெளியாகியுள்ளது.
வலயக்கல்வி அலுவலகத்திற்கான கீதம் பிரதி மற்றும் உதவிக் கல்விப் பணிப்பாளர் முன்னிலையில் உத்தியோகபூரவமாக கையளிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.