(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு மாவட்டத்திற்கான புதிய அரசாங்க அதிபராக திருமதி. ஜஸ்ரினா யுலேக்கா முரளீதரன் இன்று (18) திகதி தனது கடமைகளை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் பொறுப்பேற்றுள்ளார்.
யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகக் கொண்டு கிழக்கு மாகாண திருகோணமலையில் வசிக்கும் தேசமாண்ய திருமதி. ஜஸ்ரினா யுலேக்கா முரளிதரன் அவர்கள் 1990 ஆம் ஆண்டில் இணைந்த வடகிழக்கு மாகாண திருகோணமலை விவசாய விரிவாக்கல் திணைக்களத்தில் பட்டதாரிப் பயிலுனராக இணைக்கப்பட்ட இவர் 1991 ஆம் ஆண்டு இலங்கை நிருவாக சேவையில் முதலாவது நியமனமாக, இணைந்த வடகிழக்கு மாகாண கிராம அபிவிருத்தித் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து 2000 ஆம் ஆண்டு இணைந்த வடகிழக்கு மாகாண கல்வி அமைச்சின் உதவிச் செயலாளராகவும், 2007 ஆம் ஆண்டிலிருந்து கிழக்கு மாகாண காணி ஆணையாளராகவும், கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் (நிருவாகம்), சமூக சேவைகள் திணைக்களத்தின் மாகாண பணிப்பாளராகவும், சிறுவா் நன்னடத்தை திணைக்களத்தின் மாகாண ஆணையாளராகவும், மோட்டாா் போக்குவரத்துத் திணைக்கள மாகாண ஆணையாளர் போன்ற பதவிகளை வகித்துள்ளதுடன், 2013 ஆம் ஆண்டு இலங்கை நிருவாக சேவையின் விசேட தரத்திற்கு உள்வாங்கப்பட்ட இவர், கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளா் (நிருவாகம்), மாகாண சபைச் செயலாளர், மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளா், கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளா், பிரதிப் பிரதம செயலாளா் (ஆளணி மற்றும் பயிற்சி) போன்ற செயலாளர் பதவிகளிலும் கடமையாற்றி வந்துள்ளார்.
பல்வேறுபட்ட மாகாண திணைக்களங்களின் தலைமைப் பதவிகள் மற்றும் மாகாண அமைச்சின் செயலாளர் பதவிகளில், பதவி வகித்த காலப்பகுதியில் அத்துறைசார்ந்த திணைக்களங்கள் மற்றும் அமைச்சுக்களில் நிலவுகின்ற குறைபாடுகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்ததுடன் அதன் முன்னேற்றப் பாதைக்கு வழிவகுத்து பல்வேறு அபிவிருத்தி சார்ந்த விடயங்களிலும் பாரிய பங்களிப்பைச் செய்தவராவார். அத்துடன் கிழக்கு மாகாண சிரேஷ்ட உத்தியோகத்தர்களுக்கான நலன்புரிச் சங்கத்தின் தலைவராகவும் இருந்துவந்துள்ளார்.
32 வருடகாலமாக இலங்கை நிருவாக சேவையில் பல்வேறு பதவிகளில் இருந்த இவர், கடந்த 2022.01.07 ஆம் திகதி கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளராக கடமையேற்று பதவி வகித்து வந்த நிலையில் கடந்த 13.12.2023 திகதி மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று தனது கடமைகளை மாவட்ட செயலகத்தில் பொறுப்பேற்றுள்ளதுடன், சமய அனுஸ்டானத்துடன் ஆரம்பிக்கப்பட்ட நிகழ்வில் புதிய மாவட்ட அரசாங்க அதிபரின் குடும்பத்தினர், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சனி ஸ்ரீகாந்த் உள்ளிட்ட மாவட்ட செயலக உயரதிகாரிகள் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.