(FAROOK SIHAN) கல்முனை உப பிரதேச செயலகம் என இனிவரும் காலங்களில் எவரும் அழைக்க கூடாது என கல்முனை தமிழரசுக்கட்சி தொகுதிக்கிளையின் தலைவர் நிதான்சன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் அமைந்துள்ள தமிழரசுக்கட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை(12) இரவு விசேட செய்தியாளர் சந்திப்பு ஒன்று நடைபெற்றவேளை மேற்கண்டவாறு தெரிவித்தது.
இதன் போது கல்முனை தமிழரசுக்கட்சி தொகுதிக்கிளையின் தலைவர் நிதான்சன் செயலாளர் மற்றும் உப செயலாளர் ஆகியோர் இணைந்திருந்தனர்.
மேலும் அங்கு கருத்து தெரிவிக்கையில்
கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பில் பல சர்ச்சைகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.இந்த பிரதேச செயலகத்தை தற்போது உப பிரதேச செயலகமாக வகுக்கும் திட்டத்தில் சில அரச அதிகாரிகள் முன்னெடுத்து வருவதாக மக்கள் பிரதிநிதிகள் உட்பட பொதுமக்கள் தத்தமது கருத்துக்களில் குறிப்பிட்டுள்ளனர்.ஆனால் இச்செயலகமானது உப பிரதேச செயலகம் அல்ல என்பதை தெரிவிக்க விரும்புகின்றோம்.இந்த விடயத்தை எமது கட்சியின் கவனத்திற்கு கொண்டு சென்றிருக்கின்றோம்.