(ஏ.எஸ்.மெளலானா)
கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக நியமிக்கப்பட்ட டாக்டர் சஹீலா இஸ்ஸதீன் இன்று திங்கட்கிழமை (11) தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதன்போது பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் துறைசார் வைத்திய அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்களினால் அவருக்கு வரவேற்பளிக்கப்பட்டது.
கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக கடமையாற்றி வந்த டாக்டர் ஏ.எல்.எம். றிபாஸ், வருடாந்த இடமாற்றத் திட்டத்தின் பிரகாரம் அம்பாறை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக இடமாற்றப்பட்ட அதேவேளை கடந்த சில மாதங்களாக இங்கு பிரதிப் பணிப்பாளராக கடமையாற்றிய டாக்டர் சஹீலா இஸ்ஸதீன் கிழக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளரினால் இப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கு முன்னதாக நிந்தவூர் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராக பணியாற்றிய இவர்
சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரியாகவும் சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை மற்றும் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை என்பவற்றில் வைத்தியராகவும் கடமையாற்றியுள்ளார்.
வைத்தியத் துறையில் 35 வருட கால சேவையைப் பூர்த்தி செய்துள்ள டாக்டர் சஹீலா இஸ்ஸதீன் சாய்ந்தமருது பிரதேசத்தின் முதலாவது பெண் வைத்தியக் கலாநிதியும் அம்பாறை மாவட்டத்தில் முதலாவது பெண் சுகாதார சேவைகள் பணிப்பாளரும் வைத்திய நிர்வாகத்துறையில் முதலாவது முஸ்லிம் பெண் அதிகாரியும்
என்பது குறிப்பிட்டத்தக்கது.