மட்டக்களப்பு மண்முனை வடக்குப் பிரதேச செயலக ஒளிவிழா – 2023

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மண்முனை வடக்குப் பிரதேச நலன்புரிச் சங்கம் நடத்திய ஒளிவிழா இன்று வியாழக்கிழமை (07) பிரதேச செயலக டேபா மண்டபத்தில் இடம்பெற்றது.

மண்முனை வடக்குப் பிரதேச செயலாளர் வி.வாசுதேவன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், அருட்தந்தை அன்னதாஸ் அடிகளார் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.இந்நிகழ்வில் அருட்பணி ராஜரெட்ணம் அடிகளார் பாலன் யேசுவின் பிறப்புத் தொடர்பில் சிறப்புரையாற்றினார். அத்தோடு நத்தார் பாப்பா வருகை தந்து நிகழ்வில் கலந்து கொண்டோருக்கு பரிசில்களை வழங்கினார்.

இதன்போது மண்முனை  வடக்குப் பிரதேச செயலகப் பிரிவில்  வசிக்கும் தெரிவு செய்யப்பட்ட வறுமைக் கோட்டின் கீழ் வாழும் 30 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன. அத்தோடு இப்பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களும் வழங்கி  வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் உயரதிகாரிகள், உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.