( வி.ரி. சகாதேவராஜா) கிழக்கு மாகாண தமிழ் பேசும் மதுவரி உத்தியோகத்தர்களுக்கான இருநாள் வதிவிட செயலமர்வு சனி(2) ஞாயிறு(3) தினங்களில் திருகோணமலை குளக்கோட்டன் மண்டபத்தில் நடைபெற்றது.
கிழக்கு மாகாண மதுவரி திணைக்கள உதவி ஆணையாளர் சண்முகம் தங்கராஜா தலைமையில் நடைபெற்ற
இச்செயலமர்வில் வளவாளர்களாக சட்டமா அதிபர் திணைக்களத்தின் சொலிஸ்டன் ஜனரல் ஜானக பண்டார மற்றும் சிரேஸ்ட அரசதரப்பு சட்டவாதியான நாகரெட்னம் நிசாந்தன் ஆகியோர் விரிவுரை வழங்கினர்.
இதன் போது நீதிமன்றத்தில் மதுவரி திணைக்களத்தின் ஊடாக வழக்குகளை கொண்டு செல்லும் போது வழக்கில் ஏற்படும் சட்டரீதியான நடவடிக்கைகளை எவ்வாறு மேற்கொள்ளுதல் தொடர்பாகவும், நஞ்சு அபின் அபாயகரமான ஔடதங்கள் சட்டம், குற்றவியல் சட்டம், சாட்சி கட்டளை சட்டம், தண்டனை கோவை சட்டம் போன்றவற்றில் ஏற்படும் சந்தேகங்களையும் தீர்த்துக் கொள்வதாகவும் இச்செயலமர்வில் கலந்துரையாடப்பட்டது.
இலங்கை மதுவரி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகத்தின் அனுமதியுடன் நடைபெற்ற இச்செயலமர்வை கிழக்குமாகாண மதுவரி திணைக்களத்தின் உதவி ஆணையாளர் ச.தங்கராஜாவின் வழிகாட்டலில் நடைபெற்ற செயலமர்வில் ஊவா மாகாண உதவி ஆணையாளர் செ.ரஞ்சன், மட்டக்களப்பு மதுவரி அத்தியட்சகர் நியுட்டன் அவுஸ்கோன், மட்டக்களப்பு, அம்பாறை, கல்முனை, திருகோணமலை மதுவரி திணைக்களத்தின் பொறுப்பதிகாரிகளும் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.