(பாறுக் ஷிஹான்) நீண்ட காலமாக பாடசாலை மாணவர்களுக்கு ஐஸ் போதைப்பொருள் உட்பட பல்வேறு போதைப் பொருட்களை விநியோகித்து வந்தவர் பெரிய நீலாவணை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெரியநீலாவணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடந்த திங்கட்கிழமை(27) மாலை 43 வயதுடைய போதைப்பொருள் வியாபாரி சந்தேகத்திற்கிடமாக நடமாடுவதாக பெரியநீலாவணை பொலிஸ் நிலைய பொறுப்பு அதிகாரி ஜே.எஸ். கே. வீரசிங்க தலைமையிலான குற்றத்தடுப்பு பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றினை அடுத்து மேற்கொண்ட விசேட சுற்றி வளைப்பின் போது சந்தேக நபர் கைதானார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீண்ட காலமாக பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து குறித்த போதைப்பொருளை விநியோகித்துள்ளதுடன் அவர் வசம் இருந்து ஒரு தொகை ஐஸ் போதைப் பொருளும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
இவ்வாறு கைதானவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படுத்த பொலிஸார் நடவடிக்கை முன்னெடுத்து வருகின்றனர்.