( வாஸ் கூஞ்ஞ) சர்வதேச மீனவர் தினத்தை முன்னிட்டு மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் இத்தினம் மன்னாரில் செவ்வாய்க்கிழமை (21) மன்னார் நகர சபை மண்டபத்தில் மிக சிறப்பாக இடம்பெற்றது.
மெசிடோ நிறுவனப் பணிப்பாளர் யே.யாட்சன் பிகிராடோ தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மன்னார் , நானாட்டான் , முசலி , மற்றும் மாந்தை மேற்கு பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் 250 க்கும் அதிகமான மீனவ சமூகத்தினர் இந் நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்
‘கடல்சார் சுற்றுச்சூழலினை பாதுகாக்கும் அமைப்புக்களின் முதன்மையினைப் புரிந்துகொள்வதும் , உலகின் மீன்வளத்தை எதிர்கால சந்ததிக்குமாய் உறுதிசெய்வதும்’ என்ற கருப்பொருளில் இங்கு உரைகள் நிகழ்த்தப்பட்டது.
கடற்றொழில் மற்றும் நீரியல் வள உதவிப் பணிப்பாளர் திரு.விசுவலிங்கம் கலிஸ்ரன் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றினார்.
சிறப்பு விருந்தினர்களாக வட மாகாணம் நீரியல் உயிர் வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபை உதவிப்பணிப்பாளர் பாலச்சந்திரன் நிருபராஜ் , மன்னார் கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் கலாநிதி திருச்செல்வம் வித்தகன் , மன்னார் மாவட்ட கரையோரப் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஜோசப் அமுதன் டானியல் உட்பட பல அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.