ஏறாவூர்பற்று செங்கலடி பிரதேச செயலகப்பிரிவிலுள்ள சித்தாண்டி கிராமத்தில் மாதவணை, மயிலத்தமடு கால்நடைப் பண்ணையாளர்களின் தலைமையில் பல வாரங்களுக்கு மேலாக மேச்சற்தரைக் காணியில் அத்துமீறிய சிங்களக் குடியேற்றத்தை தடுத்து நிறுத்துமாறு கால்நடைப்பண்ணையாளர்களால் மேற்கொள்ளப்படுகின்ற கவனஈர்ப்பு என்பது தெருவோரங்களில் கூடாரங்களை அமைத்து மிகவும் அமைதியான முறையில் இரவு,பகலாக பொருளாதார கஸ்டத்திற்கு மத்தியில் கால்நடைப் பண்ணையாளர்களும், அவர்களின் உறவினர்களும் மிகவும் விழிப்புடன் கவனஈர்ப்பை மேற்கொள்வது வரவேற்கக் கூடிய விடயமாகும்.
இக் கவனஈர்ப்பு தொடர்பாக மக்கள் பிரதிநிதிகள், வெகுஜன அமைப்புக்கள், அரசியற்கட்சிகள் அனைவரும் கவனஈர்ப்புக்கு ஒத்துழைப்பு வழங்குவது ஊக்கப்படுத்தப்பட வேண்டிய விடயமாகும். இக் கவனஈர்ப்பு என்பது பிரதேசம், மாவட்டம், மாகாணம், முழுஇலங்கை, சர்வதேசம் ரீதியாக அனைவரினதும் கவனத்தை ஈர்ந்துள்ளது என்பது கால்நடைப்பண்ணையாளர்களுக்கு கிடைத்துள்ள வெற்றியாகும்.
கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள மாதவணை, மயிலத்தமடுவிலுள்ள மகாவலிக் காணி மட்டக்களப்பு மாவட்டத்திற்கு உட்பட்ட வையாகும். இதற்கு அருகிலுள்ள அம்பாறை மாவட்டத்திற்குரிய மகாவலிக்காணியில் நூற்றுக்கு நூறுவீதம் சிங்கள மக்களே குடியேற்றப்பட்டு, விவசாயச்செய்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மகாவலிக் காணிக்கென ஒரு கொள்கை, ஒரு திட்டம் நடைமுறையில் உள்ளது. அப்படி பார்க்கும் போது இப்பகுதியில் தமிழர்களே குடியேற வேண்டும். இவைமறுக்கும் பட்சத்தில் மகாவலி காணி ஊடாக மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏதோ ஒன்று ஆட்சியாளர்களால் தமிழ் மக்களுக்கு பாதகமான ஒரு திட்டம் அமுல்படுத்தப்பட்டு வருகின்றன.
மட்டக்களப்பு நகரில் ஜனாதிபதி நிகழ்ச்சி நடாத்தும் இடத்திலிருந்து அருகிலேயே சிங்கள மதகுரு உட்பட சிங்கள மக்கள் ஆர்ப்பாட்டம் நடாத்தும் போது ஜனாதிபதியின் படத்திற்கு தும்புத்தடிகளாலும், ஈர்க்கு வார்வக்கட்டுகளாலும் படத்தின் மீது அவமானப்படுத்தும் செயலில் ஈடுபட்டபோது விட்டுக்கொடுத்த சட்டமொழுங்கு சித்தாண்டு, கொம்மாதுறையில் ஒரு பக்கச் சார்பாக பிடியாணை பெறப்பிப்பது எந்த வகையில் நியாயம்?
கால்நடைப் பண்ணையாளர்களின் கோரிக்கை வெற்றி பெறுவதற்காக அரசியற் கட்சிகளும்,பொது அமைப்புக்களும், மக்களும் ஆதரவு தெரிவிப்பது நியாயமே. ஆனால் கால்நடைப்பண்ணையாளர்களின் கோரிக்கை தொடர்பாக ஜனாதிபதியிடம் பேசும் போது இன்னும் ஓர் இரு தினங்களில் அனைவரிடமும் கலந்தாலோசித்து இவ் விடயத்திற்கு முடிவு எடுக்கப்படுமென கூறியதாக தெரிய வருகின்றது.
இச் சந்தர்ப்பத்தில் கால்நடைப்பண்ணையாளர்களின் கவனஈர்ப்பு போராட்டம் திசை மாறாமல் இருக்க கால்நடைப் பண்ணையாளர்கள் சரியாக வழி நடாத்த வேண்டும். இத்தோடு ஆதரவு தெரிவிப்பவர்கள் கால்நடைப் பண்ணையாளர்களின் ஆலோசனையின் கீழ் செயற்படுவது ஆரோக்கியமானதாகும்.
கால்நடைப் பண்ணையாளர்களின் நிருவாகத்தில் உள்ளவர்களுக்கு சட்டரீதியாக எடுக்கப்பட்ட முடிவு சிங்கள மதகுருமாருக்கும் பொருந்தும். மதகுருவுக்கு எதிராக எடுக்க முடியாத சட்டமொழுங்கு எவ்வாறு சட்டமொழுங்கின் கீழ் இருக்கின்ற அமைப்புக்களுக்கு எடுக்க முடியும். இத்தடை உத்தரவு ஜனாதிபதியின் வருகைக்காகவா?
ஆளும்தரப்பு இரண்டு அமைச்சர்களும் எங்கே? இவ்விடயங்களுக்கு தீர்வு காணாமல் இருப்பது தங்களின் இயலாமையா என மு.கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெத்தினம் கேள்வி எழுப்பியுள்ளார்.