(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை வடக்கின் சிறுவர் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் பிரதேச செயலக டேபா மண்டபத்தில் (20) இடம்பெற்றது.
இதன்போது பிரதேச சிறுவர் அபிவிருத்தி குழு மற்றும் பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளைக் குறைக்கும் வலையமைப்பின் 3ம் காலாண்டுக்கான விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
இதில் பாடசாலை இடைவிலகல், சிறுவர் கழகங்களை மேம்படுத்தல், கிராம சிறுவர் பாதுகாப்பு குழுக்களை முன்னேற்றுதல், சிறுவர் தற்கொலைகள் மற்றும் 4ம் காலாண்டில் மேற்கொள்ள வேண்டிய வேலைத்திட்டங்கள் ஆகியன தொடர்பாகவும் பாலியல் மற்றும் பால்நிலை சார் வன்முறைகளுக்கு எதிரான செயலணிக்கான விதிமுறை குறிப்புகளும் கலந்துரையாடப்பட்டன.
மேலும் பிரதேசத்தில் குடும்ப வன்முறைகள் மற்றும் தற்கொலையினைத் தடுப்பதற்கான வழிமுறைகள், பிரச்சினையினை கையாளுதல் தொடர்பாக ஆளுமை விருத்தி என்பவற்றுக்கான வழிகாட்டல்களை வழங்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டு, அது தொடர்பான தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.இந்நிகழ்வில் கிராம சேவை உத்தியோகத்தர்கள், முறை சாரா வலயக்கல்வி பணிப்பாளர், பொலிஸ் மற்றும் சிறுவர் நன்னடத்தை அதிகாரிகள், அரச, அரச சார்பற்ற நிறுவன, மகாசங்கங்களின் பிரதிநிதிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.