களுவாஞ்சிகுடிப் பிரதேசத்தில்  சிறுவர் மற்றும் பெண்கள்  அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்)  மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் எருவில்பற்று களுவாஞ்சிகுடிப் பிரதேசத்தில்  சிறுவர் மற்றும் பெண்கள்  அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் (19) இடம் பெற்றது.

பிரதேச செயலக பிரிவின் மூன்றாம் காலாண்டுக்கான  பிரதேச சிறுவர் அபிவிருத்தி குழு,  பால்நிலை அடிப்படையிலான வன்முறை குறைப்பு மற்றும் உளவளத்துணை சம்மேளனத்தின் இக்கலந்துரையாடல் பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரத்னம்   தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில்  நடைபெற்றது.இதன்போது பிரதேசத்தில் சிறுவர்கள் மற்றும் பெண்கள் எதிர்கொள்ளும்  பிரச்சினைகள்  தொடர்பில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டதுடன்  எதிர்காலத்தில் மேற்கொள்வதற்காக எதிர்பார்க்கப்படும்   விடயங்கள் தொடர்பாக  ஆராயப்பட்டது.

குறிப்பாக சிறுவர் பாடசாலை இடைவிலகலைக்  கட்டுப்படுத்தல், சிறுவர் பாதுகாப்பு மிக்க  நிலையான குடும்பச் சூழலை உருவாக்குதல், சிறுவர் அபிவிருத்தி நிலையங்களின் தரங்களை கண்காணித்தல், பல்துறை சார்ந்த ஒருங்கிணைப்புகளை பலப்படுத்தல், பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கான சட்ட ரீதியான பாதுகாப்பை பெற்றுக் கொடுத்தல், குடும்ப வன்முறைகளைக்  குறைத்தல், உளநல பாதிப்புற்றோர் தொடர்பில் மேற்கொள்ள  வேண்டிய நடவடிக்கைகள் போன்ற  விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.

இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் சத்தியகௌரி தரணிதரன், வலயக் கல்வி அலுவலகம், பொலிஸ் திணைக்களம், சுகாதார திணைக்கள அதிகாரிகள் உட்பட அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள்,  சிறுவர் அபிவிருத்தி நிலையங்களின் முகாமையாளர்கள், கிராம சேவை, பொருளாதார மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், ஏனைய துறை சார்  உத்தியோகத்தர்கள் என பலரும் பங்கேற்றனர்.