அடியார்களின் அரோகரா கோஷத்துடனும் மங்களவாத்தியம் முழங்க, சிவாச்சாரிய குருமார்களின் வேத மந்திர பாராயணத்துடன் மகாவலி கங்கையில் தீர்த்தோற்சவம் வெகு சிறப்பாக நடைபெற்றது. அடியார்கள் உயிர் நித்த தமது உறவுகளை நினைந்து விரதம் இருந்து பிதிர்கடன் செலுத்தினார்கள்.
கடந்த 7.8.2023 ஆம் திகதியன்று கொடியேற்றதுடன் திருவிழா ஆரம்பமாகி தொடர்ந்து 10 நாட்கள் மகோற்சவ விழாக்கள் நடைபெற்றன. .500 வருடகால சிறப்பு மிக்க ஆலயத்தின் ஸ்ரீ சித்திர வேலாயுதர் சுவாமி இந்து சமூத்திரத்தின் முத்தென திகழும் இலங்கை திருநாட்டின் வடமத்திய மாகாணத்தில் பொலன்னறுவை மாவட்டத்தில் இயற்கை எழில் கொஞ்சும் மகாவலி கங்கைக் கரைதனில் வண்ண மயில்கள் நடனமாட அருவமும் உருவமாகி ஞான வேலாய் திகழ்ந்து அடியார்களுக்கு அருள் பாலிக்கின்றார்.
இவ்வாலயமானது ஆடி அமாவசையில் பிதிர் கடன் செலுத்தும் சிறப்பும், மூர்த்தி,தலம்,தீர்த்தம் என சகலதும் நிறைந்த திருப்படை ஆலயமாக காணப்படுகிறது.
அத்துடன் மூன்று வேளை நித்திய பூஜையும் நடைபெறுகிறது. வேறு மத்தத்தவரும் இவ்வாலயத்திற்கு வருகை தருவது வழக்கமாகும்.
மன்னம் பிட்டி,கறுப்பளை,திருகோணமடு,தீவுச்சேனை,முத்துக்கல்,சொறிவில் ஆகிய தமிழ் கிராமங்கள் காணப்படுகிறது.வடமத்திய மாகாணத்தின் பொலநறுவையில் பிரசித்தி பெற்ற முருகன் ஆலயமாகும்.
குறித்த ஆலயத்தில் உற்சவ நிகழ்வுகள் யாவும் ஆலய பிரதம குரு ஈசான சிவாச்சாரியார் சிவஸ்ரீ சி.சுதன் சர்மா குருக்களுடன் மகோற்சவ பிரதம குரு பிரதிஷ்டா பூஷணம் சிவாகம கலாநிதி சொற்பொழிவு வேந்தர் ஜோதிட சாகரம் சிவஸ்ரீ குமார பிரபாகர சிவாச்சாரியார் ஆகியோரின் அருளாசியுடன் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.
|