(ஏ.எஸ்.மெளலானா) கல்முனை மாநகர வீதிகளில் வாகனப் போக்குவரத்துக்கும் பாதசாரிகளின் நடமாட்டத்திற்கும் இடையூறு விளைவிக்கும் வகையில் வர்த்தக செயற்பாடுகளில் ஈடுபடுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்முனை மாநகர சபை அறிவித்துள்ளது.
கல்முனை- அக்கரைப்பற்று, கல்முனை- மட்டக்களப்பு நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட பிரதான வீதியோரங்களில் வர்த்தக நிலையங்களின் பெயர்ப் பலகைகள், விளம்பரப் பதாகைகள் மற்றும் விற்பனைப் பொருட்களும் பெருமளவில் காட்சிப்படுத்தப்படுகின்றன.
இவை நடைபாதைகளையும் வடிகான்களையும் ஆக்கிரமித்திருப்பது மாத்திரமல்லாமல் அவற்றையும் தாண்டி வீதிகளில் கூட பொருட்கள் குவிக்கப்பட்டிருக்கின்றன.
அனுமதிக்கப்படாத தெருவோர அங்காடி வியாபாரங்களும் நடைபெறுகின்றன. அத்துடன் வீதிகளில் வாகனங்களை நீண்ட நேரம் தரித்து வைப்பதும் நடமாடும் வியாபார வாகனங்களை நிறுத்தி வைத்து வியாபாரம் மேற்கொள்வதும் சாதாரணமாக இடம்பெற்று வருகின்றன.
இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகளினால் வீதிகளில் போக்குவரத்து நெருக்கடிகள் ஏற்படுவதுடன் விபத்துகளும் சம்பவிக்கின்றன. இதனால் வீதியோரமாக பாதசாரிகள் நடந்து செல்வதற்குக் கூட இடமின்றி அசெளகரியங்களையும் ஆபத்துகளையும் எதிர்நோக்கி வருகின்றனர்.
இவ்வாறான இடையூறுகள் மற்றும் ஆபத்தான சூழ்நிலைகளை கருத்தில் கொண்டும் வீதிகளை ஒழுங்குபடுத்தி, அழகுபடுத்தும் நோக்கிலும் மாநகர சபை, வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் பொலிஸார் இணைந்து உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதென தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்முனை மாநகர சபை மேலும் தெரிவித்துள்ளது.