கலாசார அலுவலர்கள் திணைக்களத்தின் தொளஸ் மக பக வேலைத்திட்டத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட நாடகப் பயிற்சிப் பட்டறை சாய்ந்தமருது மழ்ஹருஸ் ஸம்ஸ் மகா வித்தியாலயத்தில் (28) கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
இப்பயிற்சிப் பட்டறையில் சாய்ந்தமருது மழ்ஹருஸ் ஸம்ஸ் மகா வித்தியாலயத்தில் உயர்தரம் கற்கும் மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டதுடன் இதன்போது வளவாளர்களால் நாடகப்பிரதி எழுதுவது தொடர்பாகவும் நாடகம் எவ்வாறு நடிப்பது சம்பந்தமாகவும் செய்முறை விளக்கங்களோடு மாணவிகளுக்கு பயிற்சிகளும் கொடுக்கப்பட்டன.
சாய்ந்தமருது பிரதேச செயலக கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எச். சபீகாவின் ஒருங்கிணைப்பில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம்.ஆசிக் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், வளவாளர்களாக முன்னாள் கோட்டக் கல்வி அதிகாரியும் ஓய்வு பெற்ற அதிபருமான ஏ. பீர் முஹம்மட் மற்றும் கலைஞர் அஸ்வான் மௌலானா ஆகியோர் கலந்து கொண்டனர்.
அம்பாறை மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ரீ.எம்.றின்சான், சாய்ந்தமருது மழ்ஹருஸ் ஸம்ஸ் மகா வித்தியாலயத்தின் அதிபர் எம்.சி. றிப்கா அன்சார், சாய்ந்தமருது பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் எஸ். சுரேஷ்குமார், அபிவிருத்தி உத்தியோகத்தர் மாஜிதா உட்பட உயர்தர மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இறுதியில் பயிற்சிப் பட்டறையில் கலந்து கொண்ட மாணவிகள் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.