மலையகத்திலுள்ள வெளிநாட்டு தொழில் முகவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

வெளிநாட்டுக்கு தொழிலுக்கு சென்று சித்திரவதைக்குட்பட்டு நாடு திருப்பிய பெண்ணை வெளிநாட்டுக்கு அனுப்பிய முகவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தேசிய அமைப்பாளரும் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினருமான ஏ.பி.சக்திவேல் தெரிவித்துள்ளார்.

அவர் இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,

அக்கரப்பத்தனை ஹென்போல்ட் மிளகுசேனை தோட்டத்தை சேர்ந்த திருமதி. சிவரஞ்சனி குடும்ப வறுமை காரணமாக வெளிநாட்டு வேலை வாய்ப்பை நாடிச்சென்றிந்தார்.

குறித்த பெண் தொழிலுக்கு சென்ற இடத்தில் கடுமையாக தாக்கப்பட்டும், அவரது உடம்பில் குண்டுசியால் குத்தப்பட்டும் மேலும் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்து 25 நாட்களில் மீண்டும் நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். அத்தோடு இவருக்கு ஏற்பட்ட அநீதிக்கு நியாயம் கிடைப்பதற்கு அவரது குடும்பத்தினர் அமைச்சர் ஜீவன் தொண்டமான் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளனர்.

மேலும், இவரை இலங்கையிலிருந்து வெளிநாட்டுக்கு அனுப்பிய முகவர் யார் என்பதை அறிந்து சட்ட நடவடிக்கைகள் எடுக்கவுள்ளதுடன், இவ்வாறு மலையகத்தில் செயற்படும் உபவெளிநாட்டு முகவர்கர்கள் பெண்களை பாதுகாப்பற்ற முறையில் வெளிநாடுகளுக்கு அனுப்பி அல்லது விற்பனை செய்து பணம் வசூலித்து வருகின்றனர்.

இவர்களுக்கு எதிராக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் ஊடாக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அண்மையில் வெளிநாட்டிற்கு சென்று தாக்குதலுக்குள்ளான திருமதி.சிவரஞ்சனி இல்லத்திற்கு நான் நேரடியாக சென்று அவருக்கு ஏற்பட்ட இன்னல்கள் தொடர்பாக கேட்டறிந்து நலம் விசாரித்து ஆறுதல் கூறியதாக அவர் மேலும் தெரிவித்தார்.