எதிராளி மீது தாக்கிய சட்டதரணி உட்பட மூவர் கைது

அக்கரைப்பற்று மத்தியஸ்தர் சபையில் கடன் கொடுக்கல் வாங்கல் சம்மந்தமான முறைப்பாடு தொடர்பான விசாரணை இடம்பெற்றுக் கொண்டிருந்த போது எதிராளி மீது தாக்குதல் மேற்கொண்ட முறைப்பாட்டாளர் ஒருவரும் அவரது மகனான சட்டத்தரணி ஒருவர் உட்பட 3 பேரை நேற்று செவ்வாய்க்கிழமை (4) கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த சட்டத்தரணி ஒருவரின் தந்தையார் நபர் ஒருவருக்கு 10 இலச்சம் ரூபாவை கடனாக கொடுத்த நிலையில் வாங்கிய கடனை திருப்பிதரமறுப்பதாக அவருக்கு எதிராக அக்கரைப்பற்று மத்தியஸ்தர்சபையில் முறைபப்பாடு செய்திருந்தார்.

இதனையடுத்து முறைப்பாட்டாளரையும் எதிராளியையும் கடந்த ஞாயிற்றுக்கிழமை (02) ம் திகதி மத்தியஸ்தர் சபையில் வருமாறு அழைப்பான வழங்கப்பட்டு இருசாராரும் அன்றைய தினம் மத்தியஸ்தர் சபையில் ஆஜராகிய நிலையில் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விசாரணை இடம்பெற்றுக் கொண்டிருந்த போது எதிராளிக்கும் முறைப்பாட்டாளருக்கும் இடையே வாக்குவாதம் இடம்பெற்றது .

இதன் போது எதிராளி மீது முறைப்பாட்டாளர் கதிரையல் தாக்குதல் நடாத்தியதையடுத்து அவர் மீது அவரின் மகனான சட்டத்தரணி உட்பட 5 பேர் தாக்குதலை நடாத்தியதையடுத்து அவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் தாக்குதலை மேற்கொண்டவர்கள் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.

இதனையடுத்து பொலிசார் வரவழைக்கப்பட்டு இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிசார் மேற் கொண்ட நிலையில் தாக்குதலை மேற்கொண்டவர்கள் தலைமறைவாகி வந்த நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை (04) சட்டத்தரணி அவரது தந்தையார் உட்பட 3 பேர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த நிலையில் அவர்களை பொலிசார் கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்டவர்களை நேற்று மாலை அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவர்களை பதில் நீதவான் பிணையில் விடுவித்துள்ளதாக பொலிசர் தெரிவித்தனர்.