தலவாக்கலை, டயகம நகரில் மதுபான சாலையை திறப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து குறித்த பகுதியில் உள்ள மக்கள் ஒன்றிணைந்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பெரியோர்கள், இளைஞர்கள், யுவதிகள், மாணவர்கள் என சுமார் இருநூறுக்கும் மேற்பட்டவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (02) ஈடுபட்டுள்ளனர்.
200 வருடங்களாக மலையத்தை அழித்து வரும் மதுபானசாலையை அமைக்க நாம் இடம் தர மாட்டோம் உட்பட பல்வேறு வாசகங்கள் ஏந்திய பதாதைகளை சுமந்தவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
டயகம 3ஆம் பிரிவிலிருந்து ஆரம்பித்து டயகம் 2ஆம் பிரிவிற்கு அதாவது புதிதாக அமைக்கப்பட்டுள்ள மதுபான சாலை வரை பேரணியாக வந்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஒரு கிலோ மீற்றர் தூரத்தில் மூன்று மதுபானசாலைகள் இருக்கின்ற நிலையில் டயகம நகரில் மதுபானசாலைகள் எதற்கு? என்றும் கேள்வியெழுப்பினர்.
பிரதேச இளைஞர் ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில்,
“சிறிய நகரமான டயகம நகரத்தில் ஒரு வங்கி வசதியோ, ஒரு சதொச நிலையமோ, எரிபொருள் நிலையமோ இல்லாதுள்ள நிலையில் மதுபான சாலைகள் அமைக்க காரணம் என்ன? கொழும்பில் இருந்து எமது பெற்றோருக்கும் பணம் அனுப்பினால் அதனை அவர்கள் பெறுவதற்காக 200 ரூபாய் அளவில் செலவிட்டு அக்கரப்பத்தனை நகருக்கே செல்ல வேண்டும்.
சில அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க முடியாத அரசியல்வாதிகள் மதுபான சாலையை அமைக்க திட்டமிட்டிருப்பது ஏனோ!.. 200 வருடகாலமாக மலையகம் மதுபானத்தினால் அழிந்து போதும் இனியும் வேண்டாம் இந்த நிலை” என்றார்.
மதுபான நிலையத்தை அமைத்துக்கொடுத்து எம்மிடம் வாக்கு பெற வேண்டும் என நினைப்பது முட்டாள் தனமாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.