கொழும்பில் வேலை செய்கின்ற தனது தந்தையை பார்ப்பதற்கு துவிச்சக்கரவண்டி மூலம் செல்ல முயன்ற சிறுவனை கல்முனை தலைமையக பொலிஸார் மீட்டு உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.
அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டாளைச்சேனை பகுதியில் 10 வயதுடைய சிறுவன் தனது தாயாருக்கு தெரியாமல் வீட்டை விட்டு இன்று அதிகாலை சென்றுள்ளார்.
இவ்வாறு வீட்டை விட்டு வெளியேறிய சிறுவன் துவிச்சக்கரவண்டி ஒன்றை பெற்று அக்கரைப்பற்று நகருக்கு சென்று பின்னர் பேருந்து ஊடாக கல்முனை பகுதியில் தனியாக நடமாடியுள்ளார்.
இவ்வாறு பாடசாலை பையுடன் சந்தேகத்திற்கிடமாக நடமாடுவதை அவதானித்த ஆட்டோ சாரதி ஒருவர் கல்முனை தலைமையக பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.
இதன் போது குறித்த தகவலுக்கு அமைய விரைந்து செயற்பட்ட பொலிஸ் குழு அச்சிறுவனை மீட்டு பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.
இதன் போது அச்சிறுவன் தனது தந்தை கொழும்பில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்வதாகவும் அவரை பார்ப்பதற்கு துவிச்சக்கரவண்டியில் அங்கு செல்வதற்கு தயாரானதாக குறிப்பிட்டார்.இதற்கமைய சிறுவனின் தாயாரை அழைத்து சிறுவனை ஒப்படைத்துள்ளதுடன் சிறுவனுக்கு பல்வேறு அறிவுரைகளையும் வழங்கிதோடு
அண்மைக்காலமாக நாட்டில் சிறுவர் தொடர்பாக பல்வேறு செய்திகள் வெளியாகி உள்ள நிலையில் பெற்றொர்கள் தங்களது பிள்ளைகளில் அக்கறையுடன் கண்கானிப்புக்களை மேற்கொள்ள வேண்டும் என கல்முனை தலைமைய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ரம்சீன் பக்கீர் தெரிவித்துள்ளார்.