மகாவலி திணைக்களத்திற்குரிய காணிகளை விவசாயிகள் நீண்டகாலமாக விவசாயத்திற்கு பயன்படுத்தி வருவதனால் அக்காணிகளை விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, கால்நடைகளுக்கு பயன்படுத்தப்படும் மகாவலி, வனவளம், வனவிலங்கு திணைக்களத்திற்குரிய காணிகளையும் கால்நடைகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கோறளைப்பற்றுவடக்கு வாகரை, கோறளைப்பற்று வாழைச்சேனை, கோறளைப்பற்று தெற்கு கிரான், ஏறாவூர்பற்று செங்கலடி போன்ற பிரதேச செயலாளர் பிரிவிற்குட்ட பகுதிகளில் அண்ணளவாக 35ஆயிரத்திற்கு மேற்பட்ட காணிகள் மகாவிலி திணைக்களத்திற்கு உரியதாக இருப்பதனால் இக் காணிகளில் விவசாயிகள் நீண்டகாலமாக காடுவெட்டி துப்பரவு செய்து சேனைப்பயிர் செய்து காணிகளை அபிவிருத்தி செய்தும் நீர்பாசணத்தையும் மழையையும் நம்பி (காலபோகம்,இடப்போகம்) மேட்டுநிலப்பயிர் செய்கையும் செய்து வருகின்றனர்.
பலர் பல இலட்சம் நிதிகளை செலவு செய்து காணிகளை வளமாக்கி அபிவிருத்தி செய்து பயன்படுத்தி வருவதனால் இக்காணிகளை உரியவர்களுக்கே வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
காணி வழங்குவதற்கான அதிகாரம் பிரதேச செயலாளருக்கு இருந்தாலும் மகாவலித் திணைக்களத்திடம் அனுமதி பெற வேண்டிய நிலைமைக்கு மகாலித்திணைக்களம் நிலைமையை உருவாக்கியுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மகாவலிக்குரிய ஒரு இலட்சம் ஏக்கர் காணிகளில் 35ஆயிரம் ஏக்கர் காணிகளில் விவசாயிகள் பல ஆண்டுகாலமாக அபிவிருத்தி செய்யப்பட்டதை விட 60ஆயிரம் ஏக்கர்கள் மகாவலியின் நேரடிகட்டுப்பாட்டில் இருக்க முடியும். இத்தோடு வனவிலங்குத் திணைக்களத்திற்கும், வனவளத் திணைக்களத்திற்கும் குறிப்பிட்ட காணிகள் உள்ளதாக கூறப்படுகின்றது. என்ன இருந்தாலும் குறைந்தது இரண்டு இலட்சம் ஏக்கருக்கு மேற்பட்ட காணிகள் கால்நடைகளின் மேச்சற்தரைக்கு ஒதுக்கீடு செய்ய முடியும். 2011ம் ஆண்டு இறுதிக் கட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கென குறிப்பிட்ட பிரதேச செயலகப் பிரிவுகளிலிருந்து 27ஆயிரம் ஹெக்டயர் காணிகளை மேச்சற்தரைக்கென அடையாளப்படுத்தியருந்ததும் குறிப்பிடத் தக்கதாகும். இது மண்முனை தென்மேற்குபட்டிப்பளை, மண்முனைமேற்கு வவுணதீவு, ஏறாவூர்பற்று செங்கலடி, கோறளைப்பற்றுதெற்குகிரான், கோறளைப்பற்று வாழைச்சேனை, கோறளைப்பற்று வடக்கு வாகரை போன்ற பிரதேச செயலாளர் பிரிவுகளில் அடையாளப்படுத்த முடியும்.
போரதீவுப்பற்று வெல்லாவெளி பிரதேசசெயலகப் பிரிவில் அரச காணி இல்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். அப்படி இருந்தாலும் நூறு,இருறூறு ஏக்கர்களுக்கு மேல் இருக்காது. இதில் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த கால்நடைகள் அம்பாறை மாவட்டத்திற்கும், பொலனறுவை மாவட்டத்திற்கும் கிட்டத்தட்ட 10ஆயிரத்திற்கு மேற்பட்ட கால்நடைகளை கொண்டு செல்வது வழக்கமாகும்.
எனவே சமூக அமைப்புகள், விவசாய அமைப்புகள், அரசநிருவாகங்கள், மக்கள் பிரதிநிதிகள் அதிகாரம் உள்ள அரசியல் தலைவர்கள். புத்திஜீவிகள் அனைவரும் விசாயத்திற்காகவும், கால்நடைகளுக்காகவும் பயன்படுத்தி வரும் மகாவலி, வனவளம், வனவிலங்கு திணைக்களத்திற்குரிய அரச காணிகளை அவர்களுக்கே கிடைக்கக் கூடியவாறு வேலைத்திட்டங்களை முன்னெடுக்குமாறு மு.கிழக்கு மாகாணசபை உறுப்பினர், ஈ.பி.ஆர்.எல்.எப். இரா.துரைரெத்தினம் கேட்டுக் கொண்டுள்ளார்.