யானையின் தாக்குதலில் பலியாகும் உயிர்கள்: மனித உயிர்களை பாதுகாப்பது தொடர்பில் அரசாங்க அதிபர் தலைமையில் உயர்மட்ட கலந்துரையாடல்.

நூருள் ஹுதா உமர்

சம்மாந்துறை பிரதேசத்தில் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் இன்று அதிகாலை யானை தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றமை அறிந்த சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர் அவர்கள் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் ஏ.எம்.எம். தௌபீக் அவர்களை தொலைபேசியின் ஊடாக தொடர்பு கொண்டு பிரதேசத்தில் யனைகளினால் பலர் மரணம் அடைந்துள்ளதுடன், பொதுமக்களின் உடமைகளையும் நாளாந்தம் சேதப்படுத்துவதையும், தெளிவுபடுத்தினார்.

சம்மாந்துறை பிரதேசத்தில் யானைகளினால் ஏற்படும் பிரச்சினைகளை கட்டுப்படுத்துவது தொடர்பான அவசர கலந்துரையாடல் அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எம்.ஏ.டக்ளஸ் தலைமையில் அரசாங்க அதிபர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

இதில் சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர், சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா, வன ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் மாவட்ட உதவிப்பணிப்பாளர் பிரசாந்த, மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப்பணிப்பாளர் எம்.சீ.எம்.றியாஸ், வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் உத்தியோகத்தர்களான ஜெகதீஸ், சுரேஸ்குமார், சிசிரகாமினி, கித்சிறி மெமன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும் சேதம் ஏற்படுத்தும் குறித்த ஒரு யானையை இனங்கண்டுள்ளதாகவும் அதனை வனவிலங்கு சரணாலயத்திற்கு இன்று ஏற்றி செல்லுவதற்கான நடைவடிக்கை எடுப்பதாகவும், விவசாய நடவடிக்கை முடியும் வரை யானைகளை வனவிலங்கு பாதுகாப்பு செயலணியும், சிவில் பாதுகாப்பு படையும் இணைந்து விவசாயிகளின் பாதுகாப்பை வயல் நிலப் பகுதிகளில் உறுதிப்படுத்துவதாக தீர்மானிக்கப்பட்டது. அதனுடன் நீண்டகால பாதுகாப்பு திட்டதினையும் தேவையான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.