ஆதம்
அட்டாளைச்சேனை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியாக டொக்டர் ஏ.எம்.எம்.இஸ்ஸடீன் நியமிக்கப்பட்டுள்ளார்.
அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி வெற்றிடம் கடந்த பல மாதங்களாக காணப்பட்டு வந்த நிலையில், அந்த இடத்திற்கு டொக்டர் இஸ்ஸடீன் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் இன்று (14) அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில்
தனது கடமையினை பொறுப்பேற்றுக்கொண்டார்.
பொத்துவில் பிரதேசத்தைச் சேர்ந்த டொக்டர் இஸ்ஸடீன் 1998 பேராதனை பல்கலைக் கழகத்தில் மருத்துவத்துறை பட்டப்படிப்பினை நிறைவு செய்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைத்தியராக கடமையாற்றியுள்ளார்.
நிந்தவூர் மாவட்ட வைத்தியசாலை, பொத்துவில் மாவட்ட வைத்தியசாலை, ஆகியவற்றில்
மாவட்ட வைத்திய அதிகாரியாகவும் இஸ்ஸடீன் பணியாற்றியுள்ளார்.
கோமாரி மத்திய மருந்தகத்தின் வைத்திய பொறுப்பதிகாரியாகவும், பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராகவும், குறிப்பிட்ட காலம் பணியாற்றியுள்ள அவர் பொத்துவில் மற்றும், திருக்கோவில் ஆகிய பிரதேசங்களின் சுகாதார வைத்திய அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார்.
தற்போது அவர் பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகராக கடமையாற்றி வந்த நிலையில், 2023.02.14 ஆம் திகதி முதல் செயற்படும் வன்னம் அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
டொக்டர் இஸ்ஸடீன் லயன்ஸ் கிளப் உள்ளிட்ட பல்வேறு சமூக சேவை அமைப்புக்களில் முக்கிய பதவிகளை வகித்து பொத்துவில் பிரதேசத்தில் பல்வேறு சமூகப்பணிகளை மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.