மக்கள் எதிர்ப்பையும் மீறி கடலட்டைப் பண்ணைகள் அமைப்பதில் தீவிரம். மக்கள் கவலை

(வாஸ் கூஞ்ஞ)

கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கிராஞ்சி இலவன்குடாப் பகுதியில் சட்ட விரோதமாக அமைக்கப்பட்டு வரும் கடலட்டைப் பண்ணைக்கு அவ் பகுதி மக்களால் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டு வருகின்றபோதும் சம்பந்தப்பட்டோர் கைவிடாது மக்களை ஆத்திரமூட்டும் அளவுக்கு தங்கள் நடவடிக்கையை முன்னெடுப்பதாக மக்கள் கவலை கொள்ளுகின்றனர்.

இது தொடர்பாக தெரிவிக்கப்படுவதாவது கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கிராஞ்சி இலவன்குடாப் பகுதியில் சட்ட விரோதமாக அமைக்கப்பட்டு வரும் கடலட்டைப் பண்ணைக்கு அப்பகுதி மக்கள் 64 வது நாளாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகிறார்கள்

இந்த நிலையில் மீண்டும் அப்பகுதியில் கடலட்டைப் பண்ணைகள் அமைப்பதற்கு நில அளவீடுகள் செய்வதற்காக தேசிய நீர் உயிரியல் உற்பத்தி மற்றும் தேசிய நீர் உயிர் ஆராய்ச்சி நிறுவனம் பூநகரி பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் நில அளவீடுகள் செய்வதற்கு வருகை தந்துள்ளதாக மக்கள் தெரிவித்தார்கள்

அப்பகுதி மக்கள் கொழும்பில் உள்ள மேலிடங்களுக்கு தொடர்பு கொண்டு தெரியப்படுத்திய போது குறித்த செயற்பாடுகளுக்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லை என்றும் மேலிடங்களுக்குத் தெரியாமல் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டது என்று அப்பகுதி மக்கள் தெரிவிப்பதும் குறிப்பிடத்தக்கது.

அத்துடன் இந்த போராட்டத்தை முன்நின்று நடத்தி வரும் பத்துக்கும் மேற்பட்ட நபர்களை ஜெயபுரம் பொலிசார் விசாரணைகளுக்கு அழைத்துள்ளார்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.