தீ, மின்சாரம், மின்னல் தாக்கம் ஆகியவற்றால் ஏற்படும் எரி காயங்களுக்கு வீட்டி வைத்தியம் என்ற போர்வையில் மேற்கொள்ளப்படும் சிகிச்சை முறைகளை தவிர்க்குமாறு யாழ். போதனா வைத்தியசாலையில் பிளாஸ்டிக் சத்திர சிகிச்சை நிபுணர் வைத்திய கலாநிதி இளாஞ்செழிய பல்லவன் வேண்டுகோள் விடுத்தார்.
வட மாகாணத்தில் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்ற எரி காயங்கள் தொடர்பில் தொடர்பு கொண்டு கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், எரிகாயங்களுக்கு உள்ளானவர்களுக்கு அயலவர்கள் கூறும் வைத்தியம் அல்லது அவர்களில் வீட்டில் உள்ளவர்கள் கூறும் பேஸ்ட் பூசுதல், கற்றாழை பூசுதல், மழை நீர் ஊற்றுதல் ஜஸ் கட்டி வைத்தல் போன்ற செயற்பாடுகளை செய்யவது அறிவார்ந்த சமுதாயத்துக்கு உகந்ததல்ல .
ஏனெனில் சிறு வயதில் கற்றிருப்போம் உலோகங்கள் வெப்பத்தை கடத்தும் என ஆனால் வீட்டில் சமையலறையில் பயன்படுத்தப்படும் அகப்பை வெப்பத்தை கடத்தாது.
வீட்டு வைத்தியம் என்ற போர்வையில் பயன்படுத்தப்படும் மேலே குறிப்பிட்ட முறைகள் அனைத்தும் வெப்பத்தை வெளியேற விடாமல் காயத்துக்கு உள்ளே செல்ல வழி வகுக்கும்.
இதன் காரணமாக எரி காயங்களில் இருந்து வெப்பம் வெளியேறாமல் உள்ளே சென்று காயங்களை மேலும் விரிவாக்கக் கூடிய சந்தர்ப்பங்கள் அதிகரிக்கிறது.
எரி காயங்கள் ஏற்பட்டால் வீட்டில் மேற்கொள்ளக்கூடிய முதலுதவிகளான மின்விசிறியை பயன்படுத்தி காற்றில் பிடித்தல் அல்லது ஓடுகிற நீரில் காயப்பகுதியை பிடிப்பதன் மூலம் வெப்ப இழப்பு குறைக்கப்படுகிறது.
குறித்த முதலுதவிகளை 20 நிமிடம் வரை மேற்கொண்டு உரிய மருத்துவரை அணுகி அதற்கான சிகிச்சைகளை பெற்றுக் கொள்ள வேண்டும்.
தற்போதைய சூழ்நிலையில் வட மாகாணத்தில் பெரும்பாலும் சிறுவர் சிறுமிகளுக்கு இவ்வாறான சம்பவங்கள் அதிகமாக நிகழ்கின்றன.
இவர்கள் இவ்வாறு பாதிக்கப்படும் போது நிலையில் வீட்டில் இருப்பவர்களின் சிகிச்சை முறைகளினால் அவர்களின் எதிர்கால வாழ்க்கை குறைபாடுகளுடன் செல்ல வேண்டிய துப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.
வட மாகாணத்தில் உள்ள 5 மாவட்டங்களிலும் உள்ள அரச வைத்திய சாலைகளில் எரி காயங்களுக்கான சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்ற நிலையில் சத்திர சிகிச்சை மேற்கொள்ள வேண்டுமாயின் வைத்தியர்கள் எம்மோடு கலந்துரையாடி அதற்கான நடவடிக்கைகளை எடுப்பார்கள்.
ஆகவே இவ்வாறான பாதிப்புகள் ஏற்படும் போது உடனடி சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ள வேண்டுமானால் யாழ் போதனா வைத்தியசாலையில் அதற்கான சகல ஏற்பாடுகளும் இருக்கின்ற நிலையில் மூடநம்பிக்கைகளை கைவிடுமாறு அவர் மேலும் கேட்டுக் கொண்டார்.