5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவை குறைக்கவோ இரத்து செய்யவோ தீர்மானிக்கவில்லை – அரசாங்கம்

நாட்டில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வழங்கப்படும் 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவை குறைக்கவோ அல்லது இரத்து செய்யவோ தீர்மானிக்கவில்லையென நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற வரவு செலவுத் திட்டத்தின் 2ஆம் வாசிப்பு மீதான விவாதத்தின்போது நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

குறித்த பிரதேசங்களில் இதற்காக காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களுக்கும் இந்த கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் இந்த கொடுப்பனவு தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகின்றதென்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான காலப்பகுதிக்கும் இந்த கொடுப்பனவுக்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.