(வி.சுகிர்தகுமார்)
ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட கண்ணகிகிராம மக்களின் குடிநீர் பிரச்சினை மற்றும் காட்டு யானை தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களுக்கு தீர்வு காணும் வகையிலான ஆலோசனை கலந்துரையாடல் கூட்டமொன்று கண்ணகிகிராமத்தின் விளையாட்டு மைதானத்தில் இன்று இடம் பெற்றது.
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரன் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் இராணுவ உயர் அதிகாரிகள் வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகள் கிராமத்தின் பல்வேறு சமூக அமைப்புக்களின் தலைவர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
கண்ணகிகிராம மக்கள் பலவருடகாலமாக குடிநீர் பிரச்சினையை எதிர்கொண்டு வருகின்றனர். சுத்தமான குடிநீர் இன்மையால் பல்வேறு நோய் உள்ளிட்ட சுகாதார சீர்கேடுகளையும் அனுபவித்து வருகின்றனர்.
இதற்கு மேலாக யானைகளின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் பீதியுடன் வாழ்ந்து வருவதுடன் அவ்வப்போது உயிரிழப்புக்களை சந்திப்பதுடன் தமது உடைமைகளையும் இழந்து வருகின்றனர். யானையின் தாக்குதலால் அன்மையில் ஏற்பட்ட குடும்ப பெண் ஒருவரின் உயிரிழப்புடன் மூன்றாவது உயிரிழப்பையும் எதிர்கொண்டுள்ளனர்.
குறித்த விடயங்களை கவனத்தில் கொண்டு உரிய தீர்வினை பெறும் வகையில் பொதுமக்களின் கருத்தை அறியும் முகமாகவே இக்கூட்டம் பிரதேச செயலாளர் வி.பபாகரன் தலைமையில் இடம்பெற்றது.
இதன் பிரகாரம் பனங்காட்டு பிரதேசத்துடன் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் குடிநீர் இணைப்பை மக்கள் பங்களிப்பு மற்றும் நன்கொடையாளர்களின் உதவியுடன் நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினர் மூலமாக பெற்றுக்கொடுக்க முயற்சி மேற்கொள்வதென தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
அத்தோடு யானையின் தாக்குதலை கட்டுப்படுத்த இராணுவத்தினரின் உதவியுடன் பொதுமக்களில் இருந்து தெரிவு செய்யப்பட்டவர்களை இணைத்து குழுவாக பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுவது எனவும் முடிவெடுக்கப்பட்டது.
அத்தோடு வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகள் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டதுடன் அவர்களும் அதனை ஏற்றுக்கொண்டனர்.
மேலும் யானை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் அரசியல்வாதிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று அரசாங்கத்தின் உதவியினை பெறுவது எனவும் ஆலோசனை முன்வைக்கப்பட்டது.