மாவீரர் துயிலும் இல்ல நினைவேந்தல் பதாதைகள் இனம் தெரியாத நபர்களினால் அகற்றப்பட்டுள்ளது

(க.ருத்திரன்)

மட்டக்களப்பு கிரான் சுற்றுவளைவு மையத்தின் அருகாமையில் இரு மருங்கிலும் பொது மக்களின் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்ட மாவீரர் துயிலும் இல்ல நினைவேந்தல் பதாதைகள் இனம் தெரியாத நபர்களினால் இன்று காலை (17) அகற்றப்பட்டுள்ளதாக ஏற்பாட்டுக் குழுவினர் கவலை தெரிவித்துள்ளனர்.
இன்று காலை குறித்த இடத்திற்கு சென்று பார்த்தபோது அவை கிழித்து அகற்றப்பட்டுள்ளதுடன் அவை கட்டிய கயிறுகள் மாத்திரம் உள்ளதாக தெரிவிக்கின்றனர்.

இதேவேளை கடந்த 15.11.2022 ஆம் திகதியன்று கிரான் தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் காட்சிப்படுத்தப்பட்ட நினைவேந்தல் பதாதை இதேபோன்று அகற்றப்பட்டிருந்ததை அடுத்து நேற்று (16) காலை மீண்டும் கிரான் சுற்றுவளைவு மையப் பகுதியில் பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்த நிலையில் அவை இன்று காலை மீண்டும் அகற்றப்பட்டுள்ளன.

மாவீரர் தொடர்பான நினைவேந்தல் பதாதைகள் இனம் தெரியாத நபர்களினால் இரவு வேளைகளில் அகற்றப்படும் வேளை அதற்கு பதிலாக ஏற்பாட்டுக் குழுவினரால் புதிதாக பதாதைகள் மீண்டும் மீண்டும் காட்சிப்படுத்தப்படும் சம்பவங்களும் தொடர்ந்து இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது.

இது தொடர்பாக மாவீரர் நினைவேந்தல் குழுவினர் தங்களது அதிருப்தியினையும் கவலையினையும் வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை எதிர்வரும் கார்த்திகை 27 ஆம் திகதி கிரான் தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் மாலை 6.05 மணிக்கு மாவீரர் நினைவேந்தல் சுடர் மாவீரர்களின் உறவுகளினால் (இறந்த உறவுகளுக்கு) ஏற்றப்படவுள்ளது.இதற்கான பல்வேறு ஏற்பாடுகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன