(க.ருத்திரன்)
மட்டக்களப்பு வந்தறுமூலை ‘அகம் ஆதரவு கரங்கள்’ அமைப்பின் முதலாவது வருட அகவை தினம் நேற்று வெகு சிறப்பாக மட்.கல்குடா இலுக்குப் பொத்தானை மலைமகள் வித்தியாலயத்தில் மாணவர்களின் பங்குபற்றுதலுடன் கொண்டாடப்பட்டது.
அமைப்பின் உறுப்பினர்கள் மிகவும் பின்தங்கிய மேற்படி பாடசாலைக்கு நேற்று காலை சென்று இறையருள் வேண்டி பாடசலையில் பொங்கலிட்டு விசேட பூசை நிகழ்வுகளில் ஈடுபட்டனர். அகம் ஆதரவு கரங்கள் அமைப்பின் தலைவர் த.நவதீபன் தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் முதலில் குறித்த அமைப்பின் சின்னம் பொறிக்கப்பட்ட ரீ சேட் அறிமுகம் செய்யப்பட்டு அமைப்பில் செயல்படுகின்ற அனைத்து உறுப்பினர்களுக்கும் அவை வழங்கப்பட்டது. பின்னர் நிகழ்ச்சிகளை ஆரம்பித்து வைக்கும் முகமாக மங்கள விளக்கேற்றலுடன் முதலாவது வருட அகவை நாளுக்கான கேக் வெட்டப்பட்டு மாணவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.தொடர்ந்து மாணவர்களுக்கு பாடசலையின் சின்னம் மற்றும் பெயர் பொறிக்கப்பட்ட களுத்துப்பட்டி மற்றும் புத்தகப் பைகளும் வழங்கி வைக்கப்பட்டது.
பின்னர் அகவை நாளை நினைவு படுத்தும் முகமாக பாடசாலை வளவினுள் தென்னங் கன்றும் மேற்படி அமைப்பின் உறப்பினர்களால் நடப்பட்டது.
இதேவேளை குறித்த அமைப்பானது கடந்த 4.11.2021 ஆம் ஆண்டு வந்தாறுமூலை பிரதேசத்திலுள்ள இளைஞர்களினால் சமூகசேவை நோக்கம் கருதி ஆரம்பிக்கப்பட்ட அமைப்பாகும்.இது கடந்த ஒருவருட காலப்பகுதியில் மாவட்டத்திலுள்ள பல்வேறு இடங்களுக்கும் சென்று கல்வி,கலாச்சாரம்,அடிப்படை வசதிகளற்ற மக்களின் நலன் கருதி பல்வேறுபட்ட வாழ்வாதார உதவிகளை வழங்கி வருகின்ற ஒரு மனித நேய அமைப்பாக செயற்பட்டு வருகின்றது.
இன்றைய நிகழ்வில் பாடசாலை அதிபர் எம்.தவநாயகம்,ஊடகவியலாளர் க.ருத்திரன் ஆகியோர்கள் அதிதிகளாக கலந்து கொண்டு அகம் ஆதரவு கரங்கள் அமைப்பிற்கு தங்களது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.