சர்வதேச நியாயாதிக்கத்தைப் பயன்படுத்துமாறு உறுப்புநாடுகளிடம் சுமந்திரன் வலியுறுத்தல் !

போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக உலகளாவிய நியாயாதிக்கத்தின் கீழ் வழக்குத் தொடரக்கூடிய வகையில் கோப்புகள் தயார் நிலையில் வைக்கப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

இலங்கை தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இப்புதிய பிரேரணை மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் வியாழக்கிழமை நடைபெறவுள்ள நிலையில் பிரேரணை வலுவானதாக இல்லை என்றும் பலராலும் சுட்டிக்காட்டப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் ஆதாரங்களைத் திரட்டும் பொறிமுறை மேலும் வலுப்படுத்தப்படவேண்டும் என குறித்த பிரேரணையில் வலியுறுத்தப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்க விடயம் என நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தார்.

நம்பத்தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டிருக்கக்கூடிய ஒருவர் தமது நாட்டிற்குள் பிரவேசிக்கும் பட்சத்தில், அவருக்கு எதிராக வழக்குத் தொடர்வதற்கும் விசாரணைகளை மேற்கொள்வதற்குமான அதிகாரம் காணப்படும் என சுட்டிக்காட்டினார்.

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துவது என்பது கடினமானதொரு செயன்முறையாக இருந்தாலும், அதற்குரிய ஆரம்பகட்ட நகர்வுகளை முன்னெடுக்குமாறு உறுப்புநாடுகளிடம் கோரியிருப்பதாகவும் சுமந்திரன் குறிப்பிட்டார். (நன்றி கேசரி)