நெருக்கடி அதிகரிக்கலாம் : இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு மேலும் கட்டுப்பாடுகள் தேவை!

எதிர்வரும் காலங்களில் அந்நிய செலாவணி நெருக்கடி மோசமடையக்கூடும் என்பதால் அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியை மேலும் கட்டுப்படுத்துமாறு இலங்கை மத்திய வங்கி நிதியமைச்சிற்கு அறிவித்துள்ளது.

நாட்டின் வெளிநாட்டு கையிருப்பு மீதான தாக்கம் எதிர்காலத்தில் தொடர்ந்து அழுத்தத்திற்கு உள்ளாகும் என்பதால், இறக்குமதி கட்டுப்பாடு உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும் என மத்திய வங்கி அறிவித்துள்ளது.

எரிபொருள், மருந்து மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு டொலர்கள் தேவைப்படுவதால், அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியை கடுமையாக கட்டுப்படுத்துமாறு மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இதன்படி, இறக்குமதி மட்டுப்படுத்தப்பட வேண்டிய அத்தியாவசியமற்ற பொருட்களின் மூன்று பட்டியல்களையும் மத்திய வங்கி அனுப்பியுள்ளதுடன், இரண்டாயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட அத்தியாவசியமற்ற பொருட்கள் இதில் உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, திறந்த கணக்கு முறையின் கீழ் பொருட்களை இறக்குமதி செய்வதற்கும் பொருட்களை விற்பனை செய்த பின்னர் பணமாக செலுத்துவதற்கும் தற்காலிகமாக தடை விதிக்குமாறும் மத்திய வங்கி நிதி அமைச்சுக்கு அறிவித்துள்ளது.