கோட்டாவும் ரணிலும் பதவி விலகி வீடுகளுக்கு செல்ல வேண்டும் – இராதாகிருஷ்ணன்

பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கி தவிக்கும் இந்நாடு மீண்டெழ வேண்டுமெனில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் பதவி விலகி வீடு செல்ல வேண்டும் என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வே. இராதாகிருஷ்ணன் வலியுறுத்தினார்.

மலையக மக்கள் முன்னணி எற்பாடு செய்திருந்த அரசசார்பற்ற நிறுவனங்களுடனான கலந்துரையாடல் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கிருஸ்ணபவான் மண்டபத்தில் நடைபெற்றது.
இடம்பெற்ற சந்திப்பில் கலந்துகொண்ட பின் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, ” இலங்கையின் பணவீக்கம் வரலாறு காணாத வகையில் உச்சம் தொட்டு – 56 சதவீதமாக பதிவாகியுள்ளது. முறையற்ற விதத்திலான பண அச்சீடு உட்பட மொட்டு கட்சி அரசின் பிற்போக்குத்தனமான ஆட்சி கொள்கையே இதற்கு பிரதான காரணம். ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி கண்டுள்ளது. ஒருவரின் வங்கி வைப்பில் 10 லட்சம் ரூபா இருந்திருந்தால் தற்போது அதன் உண்மையான பெறுமதி 5 லட்சமாகவே இருக்கும். அந்தளவுக்கு பொருட்களின் விலைகளும் எகிறியுள்ளன.

எனவே, நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிநிலை நீங்க வேண்டுமெனில் ஜனாதிபதியும், பிரதமரும் பதவி விலகுவதே சிறந்த தேர்வாக இருக்கும். தற்போதைய ஆட்சியாளர்களை சர்வதேச சமூகம்கூட ஏற்கவில்லை.

கட்டாரிலுள்ள முக்கிய நிறுவனமொன்றை தடைபட்டியலில் கோட்டா அரசு இணைத்தது. இதன்விளைவாகவே கட்டாரில் இருந்து எரிபொருளை பெறுவதில் அரசு திண்டாடுகின்றது. முறையற்ற – தெளிவற்ற – கொள்கையற்ற ஆட்சிபோக்கே இதற்கு காரணம்.

சஜித் பிரேமதாவுக்கு சர்வதேச சமூகத்துடன் சிறந்த தொடர்பு உள்ளது. அரபுலக நாடுகளுடனும் நட்புறவை பேணிவருகின்றார். அவரால் தான் நாட்டை மீட்க வேண்டும் – என இராதாகிருஷ்ணன் மேலும் குறிப்பிட்டார்.