பிரதமர் பதவியை ரணில் உடனடியாக இராஜினாமா செய்ய வேண்டும் – சஜித்

ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான அரசாங்கம் உடனடியாக இராஜினாமா செய்வதைத் தவிர வேறு வழியில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கத்தினால் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டபோதே அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

இதன்போது தொட்ர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “இன்று மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இந்த நாட்டு மக்களை அழிக்கும் ராஜபக்ஷ ஆட்சியை அகற்ற வேண்டும் என கோரிக்கை வைக்கிறோம்.

பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்க உடனடியாக பதவி விலக வேண்டும்.

இனியும் இந்த நாட்டை அழிக்காதீர்கள். ஏனெனில் இந்த நாட்டில் வாழும் இலட்சக்கணக்கான மக்களுக்கு வாழும் திறன் இல்லை.

எனவே நாட்டை மீட்பதற்காக இந்த நாட்டின் அனைத்து முற்போக்கு அரசியல் சக்திகளுடனும் கைகோர்க்க தயாராக உள்ளோம்.

எனவே, நாட்டை சீரழிக்கும் இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் மக்கள் போராட்டத்தில் இந்த நாட்டிலுள்ள அனைவரும் இணைந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்” என மேலும் தெரிவித்துள்ளார்.