சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்டு திருமலையில் கைது செய்யப்பட்ட ஐந்து சிறுவர்கள் விடுதலை : 41 பேருக்கு விளக்கமறியல் ஐந்து பெண்களுக்கு பிணை.

(ரவ்பீக் பாயிஸ் )

திருகோணமலை ஜமாலியா கடற்பரப்பிலிருந்து சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்டு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருகோணமலை நீதிமன்ற நீதவான் பயாஸ் ரசாக் முன்னிலையில் நேற்று (03) 9.30 மணியளவில் குறித்த சந்தேக நபர்களை ஆஜர்படுத்திய போதே இக்கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட 03 தாய்மார்களையும்,02 பெண்களையும் 25000 ரூபாய் சரீர பிணையில் செல்வதற்கு கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், ஐந்து சிறுவர்களை விடுவிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டார்.

குறித்த நபர்கள் கம்பஹா அம்பாறை திருகோணமலை யாழ்ப்பாணம் வவுனியா மட்டக்களப்பு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிசார் தெரிவித்தனர்.

அத்துடன் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர்களில் ஒருவர் சுகயீனமுற்றிருப்பதினால் குறித்த நபரை வைத்தியசாலையில் அனுமதிக்குமாறும் குறித்த நபரை 15ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதிவான் பொலிஸாருக்கு கட்டளையிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.