ஊடகவியலாளர் சஹீர்கான் தாக்கப்பட்டமை கண்டனத்திற்குரியது : சிலோன் மீடியா போரம் கண்டனம்

(நூருல் ஹுதா உமர்)

ஊடகவியலாளர்களை அவர்களின் பணியை சிறப்பாக செய்யவிடாமல் தடுப்பதும், அவர்களின் பணிக்கு இடையூறு செய்வதும் தொடர்கதையாகி வருவது கவலையளிக்கிறது. அதன் தொடர்ச்சியாக பாலமுனையில் பொலிஸாருக்கும்- பொதுமக்களுக்குமிடையே இடம்பெற்ற முரண்பாடு தொடர்பில் செய்தி சேகரிக்க சென்ற பிராந்திய ஊடகவியலாளர் பாருக் முஹம்மட் சஹீர்கான் தாக்கப்பட்டமை கவலையளிக்கிறது. இந்த வன்செயலுக்கு எங்களின் கடுமையான கண்டனங்களை தெரிவித்து கொள்கிறோம் என சிலோன் மீடியா போரம் தன்னுடைய கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது, ஊடகவியலாளர்களின் பணியை செய்யவிடாமல் தடுத்த அந்த குழுவினர் உடனடியாக கைதுசெய்யப்பட்டு அவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பொலிஸ் திணைக்களத்தை கேட்டுக்கொண்டுள்ளோம். ஜனநாயகத்தின் தூணை அசைத்து பார்க்க எந்த சக்திகளுக்கும் இடமளிக்க முடியாது. ஊடகப்பணி சுயாதீனமாக இயங்க சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர் பாருக் முஹம்மட் சஹீர்கானுக்கான நீதி நிலைநாட்டப்பட்டு அவருக்கு ஏற்பட்ட நஷ்டங்களை ஈடுசெய்ய உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுகொள்ளப்பட்டுள்ளது .