அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்களில் மன்னார் மாவட்டத்திலும் இயல்பு நிலை பாதிப்பு

(வாஸ் கூஞ்ஞ)

அரசாங்கத்துக்கு எதிராக வியாழக்கிழமை (28.04.2022) நாடு பூராகவும் எதிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்ட நிலையில் மன்னார் மாவட்டத்தில் பாடசாலைகள் வங்கிகள் இயங்காத நிலை காணப்பட்டபோதும் போக்குவரத்துக்களும் மட்டுப்படுத்தப்பட்ட நிலையிலேயே இடம்பெற்று வந்ததைக் காணக்கூடியதாக இருந்தது.

ஒருசில பகுதிகளில் ஒரு சில கடைகள் மூடப்பட்டிருந்ததுடன் மக்கள் போக்குவரத்தும் மந்தகதியிலேயே காணப்பட்டது.

அத்துடன் மன்னார் பொது வைத்தியசாலையைச் சேர்ந்த நான்கு சுகாதார சேவைகள் தொழிற்சங்க அமைப்புக்கள் நண்பகல் 12 மணி தொடக்கம் இரண்டு மணி வரை வைத்தியசாலைக்கு முன்பாக பதாதைகளை ஏந்தியவாறு தங்கள் போராட்டத்ததை முன்னெடுத்திருந்தனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருட்களின் விலையேற்றம் மருத்துவ வசதிகளின் பற்றாக்குறைகள் மருந்து தட்டுப்பாடுகள் போன்ற குறைபாடுகளை உடனடியாக நிவர்த்தி செய்ய வேண்டும் என்ற விடயங்களை முன்னிருத்தி மன்னார் மருத்துவச் சங்கம் பராமரிப்புச் சங்கம் மன்னார் மாவட்ட ஸ்ரீலங்கா ஜனரஜ சுகாதார சேவைகள் சங்கம் ஆகியன ஒன்றினைந்து இவ் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

இவ் போராட்டம் இன்று (28) இரு மணி நேரம் நடைபெறுகின்றபோதும் முன்னெடுக்கப்படும் விடயங்களுக்கு தீர்வு இல்லையேல் எதிர்காலத்தில் நாடு பூராகவும் தங்கள் சங்கங்கள் உட்பட அனைத்துச் சங்கங்களும் சுகவீன விடுமுறையில் எமது போராட்டங்களை மேற்கொள்ள இருக்கின்றோம் என மன்னார் மாவட்ட மற்றும் வட மாகாண ஸ்ரீலங்கா ஜனரஜ சுகாதார சேவைகள் சங்கத் தலைவர் எஸ்.எச்.எம்.இல்ஹாம் இவ்வாறு தெரிவித்தார்.