அத்தியாவசிய சேவைகளுக்கான வரிசைகள் உடனடியாக நீக்கப்பட வேண்டும் – கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ

(வாஸ் கூஞ்ஞ)

•பொருளாதாரத்தையும் தேசிய பாதுகாப்பையும் இல்லாதொழித்த நாட்டையே கடந்த அரசாங்கம் எமக்கு கையளித்தது.

•தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலையை ஒவ்வொன்றாக தீர்த்து வருகிறோம்.

•சர்வதேச நாணய நிதியம் போன்றே நட்பு நாடுகளும் எங்களுக்கு உதவ தயாராக உள்ளன.

எரிபொருள், எரிவாயு, மின்சாரம் மற்றும் மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கு காணப்படும் இடையூறு மற்றும் அதற்காக வரிசையில் காத்திருக்கும் நடவடிக்கையையும் உடனடியாக நிறுத்த வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.

குறுகிய காலத்தில் வரிசையில் காத்திருக்கும் செயற்பாட்டை நிறுத்த முடியும் என நம்பிக்கை தெரிவித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், பிரச்சினைகள் தீர்க்கப்பட்டவுடன் பொருட்களின் விலைகளை கட்டுப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடலை ஆரம்பிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இந்தப் பொறுப்புகளை இன்னொருவர் நிறைவேற்றும் வரை காத்திருப்பதன் மூலம் ஏற்படும் பாதிப்புகளை தாம் முழுமையாகப் புரிந்து கொண்டிருப்பதாகக் கூறிய கௌரவ பிரதமர், இந்த நெருக்கடியிலிருந்து நாட்டைக் காப்பாற்றுவதற்கு முன்னெடுக்கப்படும் ஒவ்வொரு நடவடிக்கையின் பின்னணியிலும் தான் காணப்படுவதை உறுதியாக நினைவில் கொள்ள வேண்டும் என்றார்.

ஆளும் கட்சியின் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களின் சங்கத்தினருக்கும் இடையே செவ்வாய்கிழமை (26) அலரிமாளிகையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே கௌரவ பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவோ அல்லது அரசாங்கமோ பதவி விலகக் கூடாது என மாகாண சபை உறுப்பினர்கள் சங்கம் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றியது. இதற்குப் பதிலளித்த கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், ‘இல்லை, நான் பதவி விலக மாட்டேன். பயப்படாதீர்கள்.’ என கூறினார் என பிரதமரின் ஊடகச் செய்தி இவ்வாறு தெரிவித்துள்ளது.