பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டவர்கள் அனைவரும் இன்று (25) விடுதலை செய்யப்பட்டனர்

(க.ருத்திரன்)

மட்டக்களப்பு கிரான் நாகவத்தை கடற்கரை காணியொன்றில் முள்ளி வாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வினை மேற்கொண்டதன் பொருட்டு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டவர்கள் அனைவரும் நேற்று (25) விடுதலை செய்யப்பட்டனர்.
குறித்த வழக்கு நேற்று (25) மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றம் வாழைச்சேனையில் நீதிபதி வி.கருணாகரன் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது சட்டமா அதிபரின் ஆலோசனையின் படி குறித்த வழக்கில் இருந்து சந்தேக நபர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டது.

இந்த வழக்குடன் சம்பந்தப்பட்ட எந்த நிபந்தனையின்படியும் பொலிஸ் நிலையத்தில் கையொப்பம் வைக்கத் தேவையில்லையென்றும் இன்றுடன் இவ்வழக்கு கைவாங்கல் செய்யப்பட்டு முடிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் சட்டத்தரணி எம்.எச்.எம்.றம்சீன் தெரிவித்தார்.

அத்துடன் இவ் வழக்கினை கல்குடா பொலிசரினால்; தாக்கல் செய்யப்பட்ட நகர்த்தல் மனுவின் அடிப்படையில் சட்டமா அதிபரின் திணைக்களத்தின் ஆலோசனைக்கு அமைய இவ் வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.இவ் வழக்கிற்கு ஒத்துழைப்பு வழங்கிய p2p அமைப்பிற்கும் குருசுமத்து வி.லவக்குமாருக்கும் தமது நன்றியை தெரிவித்தார்.

இவ் வழக்கில் குருசுமுத்து விமலசேன வயது (68) என்பவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தமையினால் 10 பேரில் 9 பேரே ஆஜராயிருந்தனர்.

இச் சம்பவம் தொடர்பாக பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 02 பெண்கள் உட்பட 10 பேர்கள் 18.5.2021 ஆம் திகதியன்று கல்குடா பொலிசாரினால் கைது செய்யப்பட்டிருந்தனர்.நீதி மன்றின் கட்டளைக்கமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய 08.12.2021 ஆம் திகதியன்று மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றம் வாழைச்சேனையில் நீதிபதி எச்.எம்.எம்.பசில் முன்னிலையில் இவர்களது வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது நிபந்தனைகளுடன் பிணையில் செல்ல நீதி மன்றம் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

அத்துடன் ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் பொலிஸ் நிலையம் சென்று 9-12 மணிக்குள் கையொப்பமிடல் வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்டையில் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.

இன்று இவ் வழக்கில் சட்டத்தரணியான எம்.எச்.எம்.றம்சீன் ஆஜராயிருந்தார்.சட்டதரணிக்கு விடுதலை செய்யப்பட்டோர் தங்களது நன்றியை தெரிவிக்கும் முகமாக நீதிமன்ற முன் வாயிலில் வைத்து மலர் மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி தமது நன்றியை தெரிவித்துக்கொண்டனர்.
இவ் வழக்கினை பொத்துவில் தொடக்கம் பொலி கண்டி வரையிலான மக்கள் பேரெழுச்சி இயக்கம் முன்னெடுத்து வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.