மரணமடைந்த பொலிஸ் உத்தியோகத்தரின் சடலம் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைப்பு

(பாறுக் ஷிஹான்)

பொலிஸ் தங்குமிட அறையில் மரணமடைந்த பொலிஸ் சார்ஜனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கல்முனை ஆதார வைத்தியசாலை சவச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பகுதியில் அமைந்துள்ள பொலிஸார் தங்குமிட அறையில் உறக்கத்திற்காக சென்ற பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரே வெள்ளிக்கிழமை(15) அதிகாலை மரணமடைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த கல்முனை நீதிமன்ற பதில் நீதிவான் ஏ.எல். நதீர் விசாரணை மேற்கொண்டதுடன் குறித்த சடலத்தை கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லுமாறு உத்தரவிட்டார்.இவ்வாறு உயிரிழந்தவர் மொனராகலை மாவட்டம் தம்பகல்ல பகுதி மக்குல்ல நகரத்தை சேர்ந்த 56 வயதினை உடைய 3 பிள்ளைகளின் தந்தையான திசாநாயக்க முதியன்சலாகே கருணாரத்ன (41831) என்பவராவார்.

இவ்விடயம் தொடர்பான அம்பாறை தடயவியல் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீர் வழிகாட்டலில் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

மரணமடைந்த பொலிஸ் அதிகாரி 30 வருடங்களாக பொலிஸ் சேவையில் இணைந்துள்ளதுடன் சுவாச நோய் இருதய நோய் தொடர்பில் மருத்துவ சேவையினை ஆரம்பத்தில் பெற்று வந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.