ஜனாதிபதியை பதவி விலகுமாறு நாடாளுமன்றத்தால் கூற முடியாது – சபாநாயகர்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு நாடாளுமன்றத்தினால் கோரிக்கை விடுக்க முடியாது என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார்.

நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ஜனாதிபதி பதவி விலகுவது, புதிய ஜனாதிபதியை நாடாளுமன்றத்தின் ஊடாக நியமித்தல் அல்லது இடைக்கால அரசாங்கத்தை அமைப்பது குறித்த யோசனை முன்வைக்கப்பட்டது.

எவ்வாறாயினும், அதற்கான அரசியலமைப்பு ஏற்பாடுகள் எதுவும் இல்லை என சபாநாயகர் கட்சித் தலைவர்களுக்கு அறிவித்துள்ளார்.

இதேவேளை, நாடாளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை என்பதால், நாடாளுமன்ற பெரும்பான்மையுடன் தீர்மானத்தை நிறைவேற்றி ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்க முடியும் என கட்சித் தலைவர்கள் சுட்டிக்காட்டினர்.

எவ்வாறாயினும், தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டாலும், 52 நாள் ஆட்சிக்கவிழ்ப்பின் போது உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவை சுட்டிக்காட்டி ஜனாதிபதி தீர்மானத்தை புறக்கணிக்க முடியும் என சபாநாயகர் பதிலளித்தார்.

மேலும் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை ஜனநாயக வழிகளில் தீர்க்க வேண்டும் என்றும் ஜனாதிபதியை தெரிவு செய்த மக்களே அவர் தொடர்பாக முடிவெடுக்க வேண்டும் என்றும் சபாநாயகர் தெரிவித்தார்.

இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு கட்சிகள் ஒன்றிணைந்து தீர்வை உருவாக்குமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்தபோதும் இடைக்கால அரசாங்கத்திற்காக அரசாங்கத்துடன் கைகோர்க்க எதிர்க்கட்சிகள் மறுப்பு தெரிவித்துவிட்டன.

இதற்கிடையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பத்து பேர் உட்பட 42 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபையில் சுயாதீனமாக செயற்படவுள்ளதாக அறிவித்ததை அடுத்து அரசாங்கத்தின் நாடாளுமன்ற பெரும்பான்மை ஆட்டம் கண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.