கல்முனையில் ஆர்ப்பாட்டம் !

( எம்.என்.எம்.அப்ராஸ்)

கல்முனை பிரதான வீதியில் ஒன்று திரண்ட இளைஞர்கள்,பொது மக்கள் ஒன்றிணைந்து நாட்டில் ஏற்ப்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தீர்க்குமாறு கோரி ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோசங்களை எழுப்பியவாறு நேற்று (05) இரவு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கல்முனை பிரதான வீதியினால் ஆர்ப்பாட்டக்காரர்கள் பேரணியாக சாஹிரா கல்லூரி வீதி சந்தி வரை சென்று (பிரதான வீதி)பின்னர் கல்முனை நகர் நோக்கி சென்ற ஆர்ப்பாட்ட பேரணி கல்முனையில் உள்ள அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களின் அலுவலகம் அமைந்துள்ள வீதியால் பேரணியாகச் சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷங்கள் எழுப்பியவாறு தமது எதிர்ப்பினை தெரிவித்தவாறு சென்றனர்.இதன் போது நாடாளுமன்ற உறுப்பினரின் அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் பொலிசார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருப்பதைக் காண முடிந்தது .

பின்னர் கல்முனை நகர் வரை பேரணியாக சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் நகரின் மத்தியில் கோஷங்களை எழுப்பியவாறுயும்,சுலோகங்களை ஏந்தியவாறும் தமது எதிர்ப்பினை தெரிவித்தனர்.

ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக கல்முனை பிரதான வீதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்ப்பட்டமை குறிப்பிடத்தக்கது.