பயங்கரவாத சட்டத்தின் மூலம் அநீதி நடந்திருக்கின்றது; சுரேன் ராகவன்

பயங்கரவாத சட்டத்தின் மூலம் அதிக நேரங்களில் அநீதி நடந்திருக்கின்றது என்பதை தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களும் சர்வதேசமும் ஏற்றுக் கொண்டிருக்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினரும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் வன்னித் தொகுதி தலைவருமான கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின் ஊடகவியலாளரின் கேள்விக்கு பதில் அளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் இருந்த கஸ்டமான ஒரு நிலையில் பயங்கரவாத சட்டம் கொண்டு வரப்பட்டது. அதன் அடிப்படையில் பங்கரவாதத்திற்கு எதிராக அது பயன்படுத்தப்பட்டுள்ளது. எனினும் அதிக நேரங்களில் அநீதி நடந்திருக்கின்றது என்பதை தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களும் சர்வதேசமும் ஏற்றுக் கொண்டிருக்கின்றது.

பயங்கரவாதம் முற்றாக அழிக்கப்பட்டு விட்டதாக சமுதாயம் ஏற்றுக் கொள்ளுமாயின் அந்த சட்டத்தை நாங்கள் முற்றாக நீக்க வேண்டும். எனினும், 2019 ஆம் ஆண்டு பயங்கரவாதம் மீண்டும் தலை தூக்கியது. உதிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்றது. ஆகவே பயங்கரவாதத்திற்கு எதிராக நாட்டில் சட்டங்கள் இருப்பது பிரச்சனையல்ல.

ஆனால் அந்த சட்டங்கள் சாதாரண மக்களை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும். ஆகையினால் அந்த சட்டத்தை சீர்திருத்தி நாட்டின் இறைமையை சரியான விதத்தில் பாதுகாத்துக் கொண்டு, இலங்கையில் மத ரீதியான, இன ரீதியான பயங்கரவாதம் இருக்குமாயின் அதற்கு எதிராக அதனை பயன்படுத்தக் கூடியதாக இருக்க வேண்டும்.

இதற்கு சமாந்தரமாக இருக்கின்ற சர்வதேச சட்டங்களை பரிசீலித்து இலங்கையின் பாதுகாப்புக்கும், மக்களின் பாதுகப்புக்கும் ஏற்ற வகையில் பயங்கரவாத சட்டத்தை அமைக்க வேண்டும் என்பது தான் எனது கருத்தாகவுள்ளது” எனத் தெரிவித்தார்.