இலங்கை வானொலி அறிவிப்பாளரும், ஆசிரியருமான எம்.ஏ.றமீஸ் பாராட்டி கௌரவிப்பு

கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் தேசிய அரச வானொலி விருது மற்றும் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் இளங்கலைஞர் விருது போன்றவற்றைப் பெற்றுக் கொண்ட ஊடகவியடலாளரும், இலங்கை வானொலி அறிவிப்பாளரும், ஆசிரியருமான எம்.ஏ.றமீஸ் மட்டக்களப்பினை தளமாகக் கொண்டியங்கும் ‘பெற்றிறெப்’ நிறுவனத்தின் மூலம் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டார்.

ஊடகவியலாளரும் ஆசிரியருமான நடனசபேஷன் தலைமையில் களுவாஞ்சிகுடி வரவேற்பு மண்டபத்தில் நேற்று(08) இடம்பெற்ற இந்நிகழ்வின்போது சுவிஸ் உதயம் அமைப்பின் பொருளாளரும் சமூக சேவையாளருமான கே.துரைநாயகம், ஓய்வு நிலை பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.விமலநாதன், சிரேஷ்ட ஊடகவியலாளரும், உதவிக் கல்விப் பணிப்பாளருமான வி.ரி.சகாதேவராஜா, ஓய்வு நிலை அதிபர் பாவாணர் அக்கரைப்பாக்கியன், எருவில் கல்வி சமூக பொருளாதார ஒன்றியத்தின் ஸ்தாபகத் தலைவர் ஏ.வசீகரன், கிழக்கு மாகாண ஊடகவியலாளர் அமைப்பின் தலைவர் தேவதிரன், எருவில் கல்வி சமூக பொருளாதார ஒன்றியத்தின் செயலாளர் ஐ.ஜீவராஜ் உள்ளிட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், துறைசார் முக்கியஸ்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இதன் போது இம்முறை அரச வானொலி விருதினைப் பெற்றுக் கொண்ட அறிவிப்பாளர், ஆசிரியர், சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.ஏ.றமீஸ் பொன்னாடை போர்த்தப்பட்டு பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.

இலங்கையின் வானொலி ஊடகத்துறையில் ஈடுபட்டிருக்கும் கலைஞர்களைப் பாராட்டிக் கௌரவிக்கும் வகையில் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட அரச வானொலி விருது விழா-2021 அண்மையில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இவ்விழாவின்போது, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பிறை எப்.எம். வானொலியில் சேவையாற்றி வரும் அறிவிப்பாளர் எம்.ஏ.றமீஸ் சிறந்த கலந்துரையாடல் நிகழ்ச்சிக்காக தெரிவு செய்யப்பட்டடு இவ்வாறு தேசிய விருதுகளைப் பெற்றுக் கொண்டதுடன், கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மூலம் இளம் கலைஞர் ஊடகத்துறை விருதினையும் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.